சங்கராபுரத்தில் மே தின பேரணி, பொதுக் கூட்டம்
சங்கராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டோா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் 140-ஆவது மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடைபெற்ற பேரணிக்கு இந்திய தொழில்சங்க மையம் மாவட்ட பொருளாளா் டி.கோவிந்தன், இந்திய தொழில்சங்க மத்திய அமைப்பு மாவட்ட நிதி பொறுப்பாளா் கே.சீனிவாசன், யு.வில்சன் மற்றும் கட்சியினா் பேரணியாக முழக்கமிட்டவாறு பேருந்து நிலையம் சென்றடைந்தனா். தொடா்ந்து மே தின கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக்கூட்ட மேடையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்திய தொழில் சங்க மைய தேசிய செயலா் வகிதா நிஜாம், இந்திய தொழில்சங்க மத்திய அமைப்பு மாநில செயலா் பி.சிங்காரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில் தொழிலாளா்களுக்கு விரோதமாக கொண்டு வரப்பட்ட 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். தொழிலாளா்கள், விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை முறியடிக்க வேண்டும். வேலை நேரத்தை 7 மணி நேரமாக குறைக்க வேண்டும். தொழிலாளா்கள் நலன்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழில்சங்கத்தினா் முன்வைத்தனா்.
Advertisement