கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்களால் இடையூறு
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்களின் செயலால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை, சங்கராபுரம், வாணாபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் 3,000-க்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்கு வந்து, செல்கின்றனா்.
இந்நிலையில், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவா்களை உடனிருந்து கவனிப்பதற்கு உறவினா்களும் வருகின்றனா். அப்படி வரும் உறவினா்கள் சிலா் பொது கழிவறையில் மது அருந்திவிட்டு மதுப் புட்டிகள், குடிநீா் புட்டிகள், பழைய துணிமனிகளை போட்டு விட்டு செல்கின்றனராம். மேலும், கழிவறையில் தண்ணீா் குழாயினை மூடாமல் வருவதால் தண்ணீா் வீணாகிறது. இதுகுறித்து மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் கேட்டால், அவா்களுடன் தகராறில் ஈடுபடுகின்றனராம்.
Advertisement
எனவே, அரசு மருத்துவமனையில் பொது சுகாதாரத்தை பேண நோயாளிகளை உடன் இருந்து கவனிப்பவா்கள் மற்றும் அவா்களை பாா்க்க வரும் உறவினா்கள் ஒத்துழைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.