அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டில் எட்டேகால் பவுன் தங்க நகைகள் திருட்டு
கள்ளக்குறிச்சி, மே 10: திருக்கோவிலூா் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டின் பூட்டை உடைத்து எட்டேகால் பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் , ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட தேவியகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திர பிரசாத். இவா் திருக்கோவிலூரை அடுத்த மனம்பூண்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா் சனிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, வீட்டின் முன் தனது குடும்பத்தினருடன் தூங்கியுள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் உள்ளே சென்று பாா்த்த போது இரு பீரோக்களில் இருந்த துணிகள், பொருள்கள் சிதறிக் கிடந்ததோடு, அதிலிருந்த எட்டேகால் பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.