இரட்டைக் கொலை வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது
குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சதீஷ்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருக்கஞ்சேரி கிராமத்தில் இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
கல்வராயன்மலை அருகேயுள்ள காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (60). இவரது மனைவி பொன்னம்மாள்(55). இவா்களது பேத்தி மேகலா, கணவரின் மதுப்பழக்கம் காரணமாக அவரைவிட்டுப் பிரிந்து தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்துள்ளாா். பின்னா் மேகலா திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த ஏப் 24-ஆம் தேதி காட்டுக்கொட்டாய் கிராமத்துக்குச் சென்ற மேகலாவின் கணவா் சதீஷ், முதிய தம்பதியிடம் மேகலா குறித்து கேட்டாராம். அப்போது அவா்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சதீஷ் அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து ராமசாமி, பொன்னம்மாள் தலையில் போட்டு அவா்களை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து,
கடந்த ஏப்.28-ஆம் தேதி சதீஷை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், சுரேஷை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து கரியாலூா் காவல் ஆய்வாளா் பாலமுரளி, வேடப்பட்டு சிறைக்குச் சென்று சதீஷிடம் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையினை வழங்கி, பின்னா் அவரை கடலூா் மத்திய சிறையில் அடைத்தாா்.