கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: பேரவையை முற்றுகையிட்ட மாணவிகள்
கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுவை சட்டப்பேரவையை ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுவை சட்டப்பேரவையை ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் கூட்டுறவுத் துறை சார்பில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 200}க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென ஓராண்டு கல்விக் கட்டணம் ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.51 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்தக் கல்வியாண்டு முடிய இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் மூலம் ஒவ்வொரு மாணவியும் ரூ. 16 ஆயிரம் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும், இந்தாண்டு பயிற்சியை நிறைவு செய்ய உள்ள மாணவிகளும் கட்டாயம் உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என அரசு உத்தரவும் பிறப்பித்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி முதல்வர், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கல்வியாண்டு முடியும் நேரத்தில் திடீரென கட்டணத்தை உயர்த்துவதை ஏற்க முடியாது என மாணவிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை ஆசிரியர் பயிற்சி மாணவிகள் 50}க்கும் மேற்பட்டோர் துறை அமைச்சரை சந்திக்க சட்டப்பேரவை முன் குவிந்தனர். இதையடுத்து அங்கு வந்த சட்டப்பேரவை காவலர்கள் 5 மாணவிகளை மட்டும் அழைத்துச் சென்று அமைச்சர் கந்தசாமியை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து மாணவிகள் அமைச்சரிடம் கல்விக் கட்டணத்தை குறைக்க கோரிக்கை வைத்தனர். பின்னர் அங்கிருந்து மாணவிகள் கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.