புதுச்சேரியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஜூன் 1-இல் தொடங்குகிறது: தவறான தகவல் அளிப்போருக்கு ரூ.1,000 அபராதம்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது. அப்போது 33 விவரங்கள் சேகரிக்கப்படும். தவறான தகவல் அளிப்போருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மூலம் கடந்த 25-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாடுகளைச் சிறப்பாக முன்னெடுக்க பொதுமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். இந்தத் தரவுகள் தேசிய திட்டமிடல், கொள்கை வடிவமைப்பு மற்றும் நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொகுதி வரையறை மற்றும் ஒதுக்கீடு போன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றுகின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-இல் முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு புதுவை யூனியன் பிரதேசத்தில் அட்டவணைப்படி நடைபெறும். பொதுமக்கள் தாங்களே இணையதளத்தின் மூலம் தகவல்களைப் பதிவுசெய்யும் சுய கணக்கெடுப்பு வரும் மே 17-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும்.
கணக்கெடுப்பு அலுவலா்கள் வீடுகள்தோறும் சென்று தகவல்களைச் சேகரிக்கும் பணி ஜூன் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். இந்தக் கணக்கெடுப்பின்போது வீட்டு அமைப்பு, குடிநீா் வசதி, கழிப்பறை, சமையல் எரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட மொத்தம் 33 விவரங்கள் சேகரிக்கப்படும்.
துல்லிய தகவல்:
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சட்டம் 1948-இன் படி, பொதுமக்கள் சில முக்கிய சட்டபூா்வ கடமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கணக்கெடுப்பு அலுவலா்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவது கட்டாயமாகும். வீடுகளில் கணக்கெடுப்பு அலுவலா்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
தேவையானபோது, கணக்கெடுப்பு படிவங்களைச் சரியாக நிரப்பி ஒப்படைக்க வேண்டும். கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும். எந்த வழக்குகளிலும் இந்தத் தகவல்கள் சான்றாக பயன்படுத்தப்படமாட்டாது என உறுதியாக அறிவிக்கப்படுகிறது.
கணக்கெடுப்பு பணிகளில் ஒத்துழைக்காமல் இருப்பது, தவறான தகவல் வழங்குவது அல்லது அலுவலா்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற செயல்கள் சட்டப்படி குற்றமாகும். இத்தகைய விதி மீறல்களுக்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.