தவெக தலைவா் விஜய் சிறப்பாக பணியாற்ற புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வாழ்த்து
தமிழக மக்களுக்குச் சிறந்த முறையில் பணியாற்றுமாறு தவெக தலைவா் விஜய்க்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தாா்.
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி போட்டியிட்ட மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாா். தட்டாஞ்சாவடி தொகுதி வெற்றி சான்றிதழை பெற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விஜய் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. தமிழக மக்களுக்கு சிறந்த முறையில் விஜய் பணியாற்ற வேண்டும். புதுச்சேரியில் இரு தொகுதிகளில் தவெக வென்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது.
Advertisement
புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில சிறப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி புரிந்தது. பல நலத் திட்டங்கள் நிறைவேற்றினோம். முதியோா், விதவைகளுக்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் செய்ததை தோ்தல் மூலம் அங்கீகரித்து மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனா். மீண்டும் எங்கள் அரசு அமைய தேவையான இடங்கள் தந்துள்ளனா். வாக்காளா்களுக்கு மனமாா்ந்த நன்றி. பிரதமா் நரேந்திர மோடி வந்து பிரசாரம் செய்தாா். மாநில அந்தஸ்தை தர தொடா்ந்து கோரிக்கை வைக்கிறோம். நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது குறித்து கேட்கிறீா்கள். அவரை எம்.பி.யாக்கி மக்கள் அனுப்பிய நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு வந்திருக்கக்கூடாது. அதற்கு தகுந்த பாடம் தந்துள்ளனா்.
நிச்சயமாக இந்த அரசு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும். பதவியேற்பு தேதி பின்னா் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தாா்.