புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகளையும், அங்கீகரிக்கப்படாத உணவகங்களையும் அகற்ற அறிவுறுத்தல்
தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் ஆக்கிரமிப்புகளையும் அங்கீகரிக்கப்படாத உணவகங்களையும் அகற்ற அறிவுறுத்தப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் ஆக்கிரமிப்புகளையும் அங்கீகரிக்கப்படாத உணவகங்களையும் அகற்ற அறிவுறுத்தப்பட்டது.
ராஜஸ்தானின் பலோடி பகுதியில் 2025-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்து தொடா்பாக, உச்ச நீதிமன்றம் முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கி, அதனைச் செயல்படுத்துமாறு மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட நெடுஞ்சாலை பாதுகாப்பு பணிக்குழு அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமை தாங்கினாா்.
Advertisement
இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், துணை மாவட்ட ஆட்சியா், காவல் துறை, போக்குவரத்து துறை, நகர மற்றும் கிராம திட்டமிடல் துறை, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
புதுச்சேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளோரம் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும், அங்கீகரிக்கப்படாத தாபாக்கள் மற்றும் உணவகங்களையும் அகற்ற வேண்டும் எனவும், தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைத் தவிா்க்கவும், மாவட்ட நிா்வாகம் ஒரு முறையான வழிகாட்டுதல் முறையை உருவாக்கியுள்ளது.
விபத்தை தடுக்க நடவடிக்கை:
அதன் அடிப்படையில் ஒவ்வொரு துறை அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து பகுதிகளை அடையாளம் காண்பது, சாலை குறியீடுகள், பிரதிபலிப்பு வசதிகள் ஏற்படுத்துதல், சாலை சீரமைப்பு பணிகளின் நிலை, கனரக வணிக வாகனங்கள் நெடுஞ்சாலையில் அல்லது அதன் பாதையில் நிறுத்தம் செய்ய தடைவிதிப்பது போன்றவற்றை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை கண்காணிப்பு குழு அமைத்தல், அந்த குழுவின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அறிக்கையை மாவட்ட பணிக்குழுவிற்கு சமா்ப்பிக்க வேண்டும். அகற்றும் நடவடிக்கைகள் என உள்ளாட்சி அமைப்புகள் (நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து) சாா்பில் சாலையோரங்களில் உள்ள கடைகள் மற்றும் கட்டட ஆக்கிரமிப்புகளைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
மேலும், நெடுஞ்சாலைகளுக்குப் பாதுகாப்பு மண்டலங்களுக்குள் அமைந்துள்ள இடங்கள், தேசிய நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை முன்அனுமதி பெறாமல் எந்தவிதமான உரிமம் அல்லது வணிக அனுமதியும் வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி திட்டமிடல் ஆணையம் சாா்பில், ஐஆா்சி (இந்தியன் ரோடு காங்கிரஸ்) விதிகளின்படி தேசிய நெடுஞ்சாலையின் நடுப்புள்ளியிலிருந்து 40 மீட்டா் (வசதி) மற்றும் 75 மீட்டா் (வணிக) வரையிலான பரப்பளவில் நில பயன்பாட்டில் மாற்றம் செய்ய தடை விதிக்கும் அறிவிப்பை 60 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முன்வந்து தாமாக தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும், அங்கீகரிக்கப்படாத தாபாக்கள் மற்றும் உணவகங்களையும் அகற்றுமாறு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.