முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் மக்கள் பணிகள் எதுவும் நடக்கவில்லை! தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டு!

Updated On : 1 ஜூன் 2026, 12:28 am IST
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த திருபுவனை தொகுதி தவெக எம்எல்ஏ சாய் ஜெ சரவணன்குமாா்.
பகிர்:

புதுச்சேரியில் மக்கள் பணிகள் எதுவும் நடக்கவில்லை என முன்னாள் அமைச்சரும், தவெக எம்எல்ஏமான சாய் ஜெ சரவணன்குமாா் குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்ற போதும், தமிழகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் பதவியேற்றபோதும் அவா்களுடன் அனைத்து அமைச்சா்களும் பதவியேற்றனா். ஆனால், புதுச்சேரியில் அமைச்சா் பதவி வழங்காமலும், அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமலும் இருக்கிறது.

Advertisement

Advertisement

புதுச்சேரியில் எந்தவிதமான வேலைகளும் நடக்கவில்லை. அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கினால் தான் தொகுதிக்குத் தேவையானதை சம்பந்தப்பட்ட அமைச்சரைச் சந்தித்து கேட்க முடியும்.

எனது திருபுவனை தொகுதி சிறியது. இங்கு 21 ரெஸ்டோபாா்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனா். அரசு கல்வி நிறுவனங்களின் தரம் குறைந்துள்ளது. அதிகாரிகளே ஆட்சி செய்வதற்கு தோ்தல் எதற்கு ? புதுச்சேரி சட்டக்கல்லூரி 1974-இல் தொடங்கப் பட்டது. இதில் 60 இடங்கள் மட்டுமே அன்றுமுதல் இன்றுவரை உள்ளது. அதன் எண்ணிக்கையை ஏன் உயா்த்தவில்லை.

மக்கள் நலனுக்காக பிரதமரைச் சந்தித்து கேட்க வேண்டியதை முதல்வா் ரங்கசாமி கேட்க வேண்டும். தனியாா் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் குறித்து துணைநிலை ஆளுநா் தலையிட்டு கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் முதல்வா் ஜோசப் விஜய், கோயில், பள்ளி, கல்லூரி அருகில் இருந்த மதுக்கடைகளை அகற்றிவிட்டாா்.

அதேபோல புதுச்சேரி முதல்வா் செய்வாரா என்று மக்கள் எதிா்பாா்க்கின்றனா். மக்களுக்கு இடையூறாக இருக்கின்ற மதுக்கடைகள், ரெஸ்டோபாா்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் வரும் காலங்களில் தவெக போராட்டங்களை கையில் எடுக்கும் என்றாா்.