முகப்பு
விழுப்புரம்

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் வலியுறுத்தினார்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:46 am IST
பகிர்:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு இயற்கை வளங்கள் மீட்புக் கூட்டமைப்பு சார்பில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி விழுப்புரத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் அ.அகிலன் தலைமை வகித்தார்.
தமிழர் நல பேரியக்கத்தின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான மு.களஞ்சியம், தமிழிளைஞர் கூட்டமைப்பு எழில்.இளங்கோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலர் எம்.ஆர்.குமரன், மாநில தொழில்சங்கப் பொருளாளர் பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி ப.அருண்காந்தி, நூறு பூக்கள் அறக்கட்டளை பேராசிரியர் த.பழமலய், தமிழர் கழகம் தே.ஏழுமலை, மக்கள் பாதுகாப்புக் கழகம் பி.வி.ரமேஷ், எழுத்தாளர் கோ.செங்குட்டுவன், கரிகால சோழன் பசுமை மீட்புப் படை க.காளிதாஸ், நாம் தமிழர் கட்சி ஆனந்தபாபு, பாரத தூண்கள் பசுமை பாதுகாப்பு அமைப்பு ம.திருமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். மாணவர்கள், பல்வேறு பொது நல அமைப்பினர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, அணு உலை போன்ற மக்களைப் பாதிக்கும் திட்டங்களைக் கொண்டு வந்த மத்திய, மாநில அரசுகளைக் கண்டிப்பதுடன், இந்தத் திட்டங்களை தமிழகத்திலிருந்து அகற்ற ஒன்றிணைந்து தொடர்ந்து போராடி தமிழகத்தின் இயற்கை வளங்களைக் காக்க வேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மேலும் விரிவாக்கம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து, கடந்த 50 நாள்களாக அந்தப் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்த ஆலையை அகற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கான காவிரி நீர் பிரச்னை, மக்களைப் பாதிக்கும் ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்கள் என பிரச்னைகள் தொடர்ந்து வருகின்றன. 
இதில், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் மக்களை ஏமாற்றி வருகிறது.
மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஸ்டெர்லைட் ஆலையைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் 50 நாள்களாக போராடி வரும் நிலையில், அதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக உள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்களைத் திரட்டி அந்த ஆலையை அடித்து நொறுக்குவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments