திருக்கோவிலூர் அருகே புதிய மதுக் கடை திறக்க எதிர்ப்பு
திருக்கோவிலூர் அருகே கோமாளூரில் புதிய டாஸ்மாக் மதுக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.
திருக்கோவிலூர் அருகே கோமாளூரில் புதிய டாஸ்மாக் மதுக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு சமூக ஆர்வலர்
பி.தாமோதரன் தலைமையில் கோமாளூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வந்து புகார் மனு அளித்துக் கூறியதாவது: கோமாளூர் அருகே ஒரு கி.மீ. தொலைவில் மேற்கு பகுதியில் உள்ள லா.கூடலூர் கிராம எல்லையில் ஒரு டாஸ்மாக் மதுக் கடையும் கிழக்குப் பகுதியில் பனப்பாடி கிராமத்தில் ஒரு மதுக் கடையும் நீண்டகாலமாக இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், பனப்பாடியில் இயங்கி வந்த மதுக்கடையை கோமாளூருக்கு இடமாற்றம் செய்து திறப்பதற்கு பணிகள் நடைபெறுகின்றன. இந்த மதுக்கடை அமைந்தால், கிராமத்தில் உள்ள இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் பெரும் பாதிப்பாக அமையும். மது அருந்துவோர் மூலம் கிராமத்தில் தகராறு ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும். மது குடித்துவிட்டு விவசாய நிலங்களில் வீசப்படும் மதுப்புட்டிகள், நெகிழித் தாள்களால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும்.
எல்லையம்மன் கோயில், வீரனார் கோயில், வெள்ளையப்பன் கோயில், வேடியப்பன் உள்ளிட்ட கோயில்களுக்கு வரும் பெண்கள் உள்ளிட்டோர் மது அருந்துவோரால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். இதனை கருத்தில்கொண்டு, கோமாளூரில் புதிய மதுக் கடை திறக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.
மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.