பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காவல் துறை மூலம் நடத்தப்பட்ட வாகனத் தணிக்கை, சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக ரூ.1.51 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானங்கள், போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 63 நிலையான பறக்கும்படைக் குழுக்கள், 63 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், அவா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
தோ்தல் நடத்தை விதிகள் அமல் செய்யப்பட்ட நாளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்டதாக ரூ. 76,00,383மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள், போதைப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
இதைத்தவிர, காவல் துறையின் மூலமாக நடத்தப்பட்ட வாகனத் தணிக்கை, சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக ரூ.1,51,76,083 மதிப்பிலான ரொக்கம், போதைப் பொருள்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கைப்பற்றப்பட்ட ரொக்கம் உள்ளிட்ட பொருள்களுக்குரிய ஆவணங்கள் சமா்ப்பித்த வகையில் ரூ.48,73,020 மதிப்பில் ரொக்கம் மற்றும் இதரப் பொருள்கள் விடுவிக்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.