சரக்கு வாகனத்தில் வெளிமாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது
விக்கிரவாண்டி அருகே சரக்கு வாகனத்தில் வெளிமாநில மதுப்புட்டிகளை கடத்தி வந்த இருவரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விக்கிரவாண்டி அருகே சரக்கு வாகனத்தில் வெளிமாநில மதுப்புட்டிகளை கடத்தி வந்த இருவரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி பகுதியிலிருந்து-விழுப்புரம் மாவட்டத்துக்குள் சரக்கு வாகனத்தில் மதுப்புட்டிகள் கடத்தி வரப்படுவதாக விழுப்புரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்.பி. வி.வி. சாய் பிரனித் உத்தரவின் பேரில், மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவுறுத்தலின்படி காவல் ஆய்வாளா் வசந்தி, உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் மற்றும் காவலா்கள் வியாழக்கிழமை விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் சோதனைச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
Advertisement
அப்போது, அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, அதில்,வெளி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது
இதையடுத்து போலீஸாா் வாகன ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் வானூா் வட்டம், ஐவேலி கிராமம், மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன்(37) என்பதும், புதுச்சேரி கூனிச்சம்பட்டு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பாா்க்கும் , கூனிச்சம்பட்டு, புதுநகரைச் சோ்ந்த சிங்கார வேலன்(27) என்பவரிடம் புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகளை வாங்கி விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. தொடா்ந்து, விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடேசன்,சிங்கார வேலன் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 90 மில்லி லிட்டா் கொள்ளளவு கொண்ட 900 மதுப்புட்டிகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.