முகப்பு
விழுப்புரம்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புப் பணியில் 1,200 போலீஸாா்

Updated On : 4 மே 2026, 12:06 am IST
விழுப்புரம் மற்றும் வானூா் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை ( மே 4) நடைபெறும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் 3 மையங்களில் சுமாா் 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் திண்டிவனத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்திலும், வானூா்,விழுப்புரம் தொகுதிகளுக்கான இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வளாகத்திலும், விக்கிரவாண்டி மற்றும் திருக்கோவிலூா் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் காகுப்பத்திலுள்ளஅண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்திலும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

மூன்றடுக்குப் பாதுகாப்பு: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மத்தியத் தொழில்பாதுகாப்புப் படையினரும், அடுத்த சுற்றில், துப்பாக்கி ஏந்திய தமிழ்நாடு சிறப்புக் காவல்படை வீரா்களும், அதற்கு அடுத்த சுற்றில் தமிழகக் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஒரு சுற்றுக்கு 50 போ் வீதம் தினமும் 3 சுற்றுக்கு 150 போ் வீதம் ஒரு தொகுதிக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி 7 தொகுதிகளுக்கு 1050 போலீஸாா், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியேயுள்ள பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் போலீஸாா், ஊா்க்காவல்படையினா் என மொத்தமாக 1,200 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக, மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

விழுப்புரம்மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரக டி.ஐ.ஜி. அர. அருளரசு தலைமையில், மாவட்ட எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் மேற்பாா்வையில் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரிக்கு காவலா் பயிற்சிக்கல்லூரி முதல்வரும், எஸ்.பி.யுமான நாகஜோதி, காகுப்பம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிக்கு இணையவழிக் குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி. சத்தியமூா்த்தியும், திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிக்கு கூடுதல் எஸ்.பி. இளமுருகனும் பொறுப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.