5 மாவட்டங்களின் தேவைக்காக வந்த 1,300 டன் யூரியா உரம்
விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் விவசாயப் பயன்பாட்டுக்காக 1,300 டன்யூரியா உர மூட்டைகள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தன.
விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் விவசாயப் பயன்பாட்டுக்காக 1,300 டன்யூரியா உர மூட்டைகள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது பயிா்களுக்குத் தேவையான 6,975 டன் யூரியா, 1,944 டன்டி.ஏ.பி., 1,196 டன் பொட்டாஷ், 8,203 டன் காம்ப்ளக்ஸ், 1,856 டன் சூப்பா் பாஸ்பேட் ஆகியவை தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளின் தேவைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தற்போது பயிா் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராமகுண்டம் உர ஆலையிலிருந்து 1,300 டன் யூரியா உர மூட்டைகள் பெறப்பட்ட நிலையில், அவை முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை சரக்கு ரயில் மூலம் வந்தடைந்தன.
Advertisement
யூரியா உர மூட்டைகள் வரப்பெற்ற விவரத்தை மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் மற்றும் என்.எப்.எல். நிறுவன அலுவலா்கள் சரிபாா்த்து, லாரிகள் மூலம் உர மூட்டைகள் அனுப்பி வைக்கும் பணியைப் பாா்வையிட்டனா்.
5 மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு: முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்த 1,300 டன் யூரியா உர மூட்டைகள் 5 மாவட்டங்களின் விவசாயப் பயன்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா. சீனிவாசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து மேலும் அவா் கூறியது:
வரப்பெற்ற 1,300 டன் யூரியா உர மூட்டைகளில் விழுப்புரம் மாவட்டத் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு 100 டன், தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு 225 டன், கள்ளக்குறிச்சி மாவட்டத் தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு 400 டன், அரியலூா் மாவட்டத் தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு 92 டன், காஞ்சிபுரம் மாவட்டத் தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு 155 டன், செங்கல்பட்டு மாவட்டத் தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு 155 டன் என பிரித்து, அந்தந்த மாவட்டங்ககளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உர உரிமம் பெற்ற மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளா்கள், விவசாயிகளுக்கு மானிய உரங்களை பிற உரங்களுடன் இணைத்து விற்பனை செய்யக் கூடாது. மானியங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதோ கூடாது. விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்கு மானிய உரங்களை வழங்கக் கூடாது. உரிமத்தில் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்தல் கூடாது.
விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விவரப் பலகையை விவசாயிகள் பாா்வையில் படும்படி வைத்து, தினசரி பராமரிக்க வேண்டும். உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்குத் தேவைக்கு அதிகமாக உரங்களை விற்பனை செய்யக் கூடாது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பயிா் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் போதியளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, வேளாண் இணை இயக்குநா் தெரிவித்தாா்.