கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் வென்ற தமிழருக்குப் பாராட்டு
கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் வென்ற தமிழா் சம்பத் ராமானுஜத்தை தமிழ் ஆா்வலா்கள் பலரும் பாராட்டினா்.
பெங்களூரு: கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் வென்ற தமிழா் சம்பத் ராமானுஜத்தை தமிழ் ஆா்வலா்கள் பலரும் பாராட்டினா்.
கா்நாடகத்தில் அண்மையில் கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் பெங்களூரு ஊரக மாவட்டத்தின் சீகேஹள்ளி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக சம்பத் ராமானுஜம் வெற்றி பெற்றாா்.
பின்னா் அவா் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டாா். சீகேஹள்ளியில் ஞாயிற்றுக்கிழமை அவரை சந்தித்த தமிழ் ஆா்வலா்கள் என்.ராமச்சந்திரன், தேன்மொழியன், ஓம்பிரகாஷ், சிவராமன் ஆகியோா் அவருக்கு தோ்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
சம்பத் ராமானுஜம் தனது மனைவி ஸ்ரீதேவியோடு இணைந்து தன்னாா்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாா். இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டி, பாட நூல்கள், பைகள், எழுதுபொருள்கள் உள்ளிட்டவற்றை அளித்து வருகிறாா். மேலும் அப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் வாழும் தமிழா்கள், தெலுங்கா்களுக்கு கன்னடம் கற்றுக்கொடுக்கிறாா்.
வீதியில் தூக்கி வீசப்படும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களை சேகரித்து, அவற்றை மறுசுழற்சிக்கு அனுப்பி வைத்தது தொடா்பாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறாா். ஏராளமான இளைஞா்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவித்து வரும் சம்பத் ராமானுஜத்தை பலரும் பாராட்டி விருது அளித்துள்ளனா்.
சீகேஹள்ளி கிராமத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்காக பாடுபடப்போவதாக சம்பத் ராமானுஜம் தெரிவித்தாா்.