முகப்பு
வணிகம்

மின் வெட்டு: தில்லி தொழில்துறை உற்பத்தி 25% சரிவு!

கோடை காலத்தில் அதிகரித்து வரும் மின் வெட்டு பிரச்னையால் தில்லி, தலைநகர் வலயம் பகுதிகளில் உள்ள தொழில் துறையின் உற்பத்தி கடந்த ஒரு மாதத்தில் 25 சதவீதம்

Updated On : 22 மே 2013, 2:39 am IST
பகிர்:

கோடை காலத்தில் அதிகரித்து வரும் மின் வெட்டு பிரச்னையால் தில்லி, தலைநகர் வலயம் பகுதிகளில் உள்ள தொழில் துறையின் உற்பத்தி கடந்த ஒரு மாதத்தில் 25 சதவீதம் குறைந்துள்ளது என்று இந்திய வர்த்தக சபைகளின் சங்கம் (அசோசேம்) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோடை கால மின்வெட்டு பிரச்னையால் தொழில் துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையை அசோசேம் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

தில்லி, நொய்டா, காஜியாபாத், குர்கான், ஃபரீதாபாத் ஆகிய பகுதிகளில் சுமார் மூன்றரை லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 60 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக அந்தப் பகுதிகளில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் மின்வெட்டால் தொழில் துறை உற்பத்தி 25 சதவீதம் குறைந்துள்ளது. இது ஜூன், ஜூலை மாதங்களில் 40 முதல் 45 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால், சில நிறுவனங்கள் டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. டீசல் ஜெனரேட்டர்களை தங்கள் நிறுவனத்துக்கு அருகே வைக்க இடமில்லாத காரணத்தாலும், டீசல் மின் உற்பத்திக்கு அதிகச் செலவு ஏற்படுவதாலும் சில நிறுவனங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் தொழிலாளர்களின் ஊதியம், குறிப்பிட்ட நேரத்துக்குள் உற்பத்திப்  பொருள்களை விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளிட்டவற்றால் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன என்று அசோசேம் ஆய்வு அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.