கொடுங்கையூரில் குடிசைகள் எரிந்து சாம்பல்: மூன்று பெண்கள் சாவு
சென்னை கொடுங்கையூரில் குடிசைகள் தீயில் எரிந்து நாசமான விபத்தில் 3 முதிய பெண்கள் இறந்தனர்.
சென்னை கொடுங்கையூரில் குடிசைகள் தீயில் எரிந்து நாசமான விபத்தில் 3 முதிய பெண்கள் இறந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
எருக்கஞ்சேரி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் 12 குடிசை வீடுகள் இருந்தன. வியாழக்கிழமை நள்ளிரவு ஒரு குடிசை வீட்டில் இருந்து திடீரென புகை வெளிவந்தது. சிறிது நேரத்தில் அந்த குடிசை தீப்பிடித்தது. அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அதேவேளையில் சிலர், தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வேகமாகப் பரவியதால், அப் பகுதி மக்கள் நிற்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு வழி மட்டுமே இருந்ததால் மக்கள் அதன் வழியே வெளியேறுவதில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.
Advertisement
இளைஞர்களும், நடு வயதினரும் வெளியேறிவிட்ட நிலையில், முதியவர்கள் அந்த வழியே வெளியேற முடியாமல் சிரமப்பட்டனர். இதில் ஒரு வீட்டில் வசித்த சரோஜா (76), அவர் மகள் மீனாட்சி (53), மற்றொரு குடிசையில் வசித்த ராஜம்மாள் (82) ஆகிய 3 பேரும் தீயில் சிக்கிக் கொண்டனர். அவர்களை அப் பகுதி மக்கள் காப்பாற்ற முயன்றும், காப்பாற்ற முடியவில்லை.
இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். தீயில் கருகிக் கிடந்த சரோஜா, மீனாட்சி, ராஜம்மாள் ஆகிய 3 பேர் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காயமடைந்த கார்த்திக், கோகிலா, கோமதி, குபேரன், ராஜா ஆகிய 5 பேரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் 12 குடிசைகளும் முழுமையாக எரிந்து நாசமாகி விட்டன. அந்த குடிசை வீடுகளில் இருந்த பணம், பொருள்கள், சான்றிதழ்கள், 4 மோட்டார் சைக்கிள்கள், 7 சைக்கிள்கள் எரிந்து நாசமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காவல்துறை உயர் அதிகாரிகள விசாரணை செய்தனர்.
மேலும் இது குறித்து கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.