சொத்து தகராறில் தம்பி அடித்துக் கொலை; சகோதரர் கைது
ஒரகடம் அருகே சொத்து தகராறில் தம்பியை கட்டையால் அடித்து கொலை செய்த சகோதரர் கைது செய்யப்பட்டார்.
ஒரகடம் அருகே சொத்து தகராறில் தம்பியை கட்டையால் அடித்து கொலை செய்த சகோதரர் கைது செய்யப்பட்டார்.
ஒரகடம் அடுத்த எழிச்சூர் ஊராட்சிக்குட்பட்டது பூண்டி கன்னடப்பாளையம். இப்பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். நான்கு மகன்களும் ஒரே பகுதியில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுமார் 30 ஏக்கருக்கும் மேலான சொத்துகள் உள்ளன. இந்நிலையில் வீரபத்திரன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய வீட்டின் அருகே உள்ள 90 சென்ட் இடத்தை விற்று பணத்தை தனது மூத்த மகன் பழனியிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் தனது 2-வது மகன் அகிலன், விபத்தில் சிக்கி தனது ஒரு காலை இழந்துள்ளார்.
இதனால் அகிலன் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அகிலன் 90 சென்ட் நிலம் விற்ற பணத்தில் தனக்கும் பங்கு வேண்டும் எனக் கேட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக பழனியிடம் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
இந்நிலையில் அகிலன் வீட்டு மின்சார இணைப்பை பழனி புதன்கிழமை இரவு துண்டித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இரவு 8 மணிக்கு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த அகிலன், பணம் கேட்டு மீண்டும் பழனியிடம் சண்டை போட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பழனி அருகே கிடந்த மரக்கட்டையால் அகிலனின் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அகிலன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து அகிலனின் மனைவி மாலதி, ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த ஒரகடம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக பழனியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.