செ.குப்புசாமி படத்தை திறந்து வைத்தார் கருணாநிதி
தொழிலாளர் முன்னேற்றச் சங்க (தொமுச) பேரவை முன்னாள் தலைவர் மறைந்த செ.குப்புசாமி உருவப்படத்தை திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார்
தொழிலாளர் முன்னேற்றச் சங்க (தொமுச) பேரவை முன்னாள் தலைவர் மறைந்த செ.குப்புசாமி உருவப்படத்தை திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் செ.குப்புசாமி உருவப்படத்தைத் திறந்து வைத்து அவர் பேசியது: 90 வயதை நெருங்கும் இந்தக் காலக்கட்டத்தில் எவ்வளவோ நண்பர்களைப் பெற்றிருந்தேன். எவ்வளவோ நண்பர்களை இழந்திருக்கிறேன்.
எனினும் எனக்கு இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை, எத்தனை பேர் மறைந்தாலும் அவர்கள் உருவாக்கி வைத்துவிட்டுப் போயிருக்கும் திமுக என்ற இந்த உருவத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. திராவிட இயக்கம் தோன்றிய காலத்தில் இருந்து நடைபெற்ற போராட்டங்களில் எல்லாம் திமுகவைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வெற்றி கண்டுள்ளோம்.
Advertisement
அப்படி வெற்றி தேடிக் கொடுப்பதற்கு திமுகவுக்கு உறுதுணையாக இருந்தவர்களில் முக்கியமானவர்தான் மறைந்த குப்புசாமி.
தொழிலாளர் பிரச்னைக்கும், திமுகவுக்கும் உள்ள தொடர்புகளை சட்டப் பேரவையில் விளக்கிப் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அது தொடர்பான புள்ளிவிவரங்களை குப்புசாமியிடம் கேட்டுத்தான் பேசியிருப்பேன். அந்த அளவுக்கு தொழிலாளர்களைப் பற்றி ஆழ்ந்த அறிவு கொண்டவர் குப்புசாமி என்றார் கருணாநிதி.
பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.