வண்டலூரில் புதிய பஸ் முனையம்: ஆம்னிகளுக்கு இடம் ஒதுக்கப்படுமா?
சென்னை அருகே வண்டலூரில் அமையவுள்ள புதிய பஸ் முனையத்தில் ஆம்னி பஸ்களுக்கென தனி நிலையம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அந்த நிறுவனத்தினரிடையே எழுந்துள்ளது.
சென்னை அருகே வண்டலூரில் அமையவுள்ள புதிய பஸ் முனையத்தில் ஆம்னி பஸ்களுக்கென தனி நிலையம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அந்த நிறுவனத்தினரிடையே எழுந்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் புறநகர் பஸ் முனையம் அமைக்கப்பட்டபோது, மாநகரில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஆம்னி பஸ்களுக்கென்றும் தனிப் பகுதி அங்கு அமைக்கப்பட்டது.இந்த நிலையில், வளர்ந்து வரும் வாகன எண்ணிக்கை, பிற மாவட்ட மக்களின் வருகை அதிகரிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு சென்னை அருகே வண்டலூரில் புதிய பஸ் முனையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தமிழக அரசு அறிவித்தது.
Advertisement
இந்த புதிய பஸ் முனையம் அமைக்கப்பட்ட பிறகு தென் மாவட்டங்களிலிருந்து வந்து செல்லும் பஸ்கள் அனைத்தும் அங்கேயே நிறுத்தப்பட்டுவிடும். இந்த புதிய பஸ் முனையத்தில் தங்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என ஆம்னி பஸ் நிறுவன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோன்ற அமைப்பு இப்போது இல்லாததால், தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் பகுதிகளில் பயணிகளை ஏற்றுவதற்காக அரை மணி நேரத்துக்கு மேல் ஆம்னி பஸ்கள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என தாம்பரம் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அஃப்சல் கூறியது:
கோயம்பேடு பஸ் முனையத்தில் ஆம்னி பஸ்களுக்கென தனி பஸ் நிலையம் அமைக்கப்பட்டதுபோல், தமிழக அரசு அறிவித்துள்ள வண்டலூர் பஸ் முனையத்திலும் ஆம்னி பஸ்களுக்கென தனி நிலையம் அமைக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம் என்றார்.