கணவரை மீட்டுத் தரக் கோரி புதுப்பெண் தர்னா
காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தரக்கோரி உறவினர் வீடு முன்பு இளம்பெண் தர்னா செய்தார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தரக்கோரி உறவினர் வீடு முன்பு இளம்பெண் தர்னா செய்தார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் தனலட்சுமி (30). இவர் பாரிமுனையில் ஜெராக்ஸ் கடை வைத்திருந்தபோது, தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாம். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்தனர். போலீஸ் தலையிட்டு இந்த திருமணத்தை நடத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.
திருமணமான அதே நாளில் தூத்துக்குடியில் இருக்கும் தனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி சென்ற செல்வகுமார் திரும்பி வரவில்லையாம். இதுகுறித்து தனலட்சுமி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
Advertisement
இந்த நிலையில், முகப்பேர் பகுதியில் உள்ள செல்வகுமாரின் சகோதரர் வீடு முன்பு கணவரை மீட்டுத் தரக்கோரி வெள்ளிக்கிழமை இரவு முதல் தனலட்சுமி தர்னா செய்தார். இதனையடுத்து செல்வகுமாரை போலீஸார் தேடினர். அவர் சென்னை புறநகர் பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சனிக்கிழமை மாலை செல்வகுமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செல்வகுமார் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தனலட்சுமி தர்னாவை முடித்து கொண்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.