ராணுவ அதிகாரி மனைவி நகைக்காக கொலை
சென்னை நந்தம்பாக்கம் அருகே ராணுவ அதிகாரி மனைவி நகைக்காக சனிக்கிழமை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை நந்தம்பாக்கம் அருகே ராணுவ அதிகாரி மனைவி நகைக்காக சனிக்கிழமை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:
நந்தம்பாக்கம் அருகே உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராதா (75). இவரது கணவர் பாலசுப்பிரமணியன் ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்தவர். அவர் இப்போது உயிரோடு இல்லை.
Advertisement
ராதாவுக்கு அம்பிகா (50), அஞ்சனா (48) என இரு மகள்கள் உள்ளனர். அஞ்சனா பெங்களூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அம்பிகா ராஜாஅண்ணாமலைபுரம் அருகே உள்ள ஆரைக்குளத்தில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
ராதாவுக்கு சில நாள்களுக்கு முன்பு போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாம். இந்நிலையில் அந்த மருத்துவமனை ஊழியர் சுரேஷ், ராதாவுக்கு கண் கண்ணாடியை கொடுக்க அவர் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றாராம்.
அங்கு ராதா வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாராம். அவர் அணிந்திருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராதாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.