ரூ.3 கோடி நிலம் மோசடி: பாமக கவுன்சிலர் கைது
சென்னை பூந்தமல்லியில் ரூ.3 கோடி நிலத்தை மோசடி செய்ததாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பூந்தமல்லியில் ரூ.3 கோடி நிலத்தை மோசடி செய்ததாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பூந்தமல்லி சுமித்ரா நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ச.ராஜேந்திரன். இவரது மகள் ஷாலி என்ற தர்ஷினி. இவர் பெயரில், அவர் பாட்டி ராணியம்மாள் பூந்தமல்லியில் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைத்தார்.
Advertisement
இந்நிலையில் ஷாலியின் உறவினர்கள் வெங்கடேசன், சீனிவாசன், நண்பர் மாதவன் ஆகியோர் அந்த நிலத்தை அபகரிக்கத் திட்டமிட்டனர். இதற்காக ராணியம்மாளைப் போல் வேறு ஒரு பெண்ணை நடிக்க வைத்து, ஏற்கனவே எழுதப்பட்டிருந்த பத்திரத்தை மாற்றி எழுதினர். மேலும் போலி ஆவணம் மூலம் அந்த நிலத்தை 3 பேரும், வேறு நபர்களுக்கு விற்கத் தொடங்கினர்.
இதையறிந்த ராஜேந்திரன், சென்னைப் பெருநகர காவல்துறையின் நில மோசடி தடுப்புப் பிரிவில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் வெங்கடேசன், சீனிவாசன், மாதவன் ஆகிய 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
வெங்கடேசன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வெங்கடேசன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியாகவும், அந்தப் பகுதி கவுன்சிலராக உள்ளார்.
சென்னையில் சொத்து வாங்குபவர்கள் அசல் ஆவணங்களை சரிபார்த்தும், சொத்துகளை விற்கும் நபர்களை நன்கு தெரிந்து கொண்டும் வாங்குமாறு குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஆர்.எஸ்.நல்லசிவம் அறிவுறுத்தியுள்ளார்.