திருவல்லிக்கேணி ராஜாஜி நகருக்கு குடிநீர் இணைப்பு கோரி வழக்கு
சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகருக்கு குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகருக்கு குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜாஜி நகரைச் சேர்ந்தவரும், தேசிய நதி நீர் இணைப்புக்கான மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான கே.சின்னராஜ் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ராஜாஜி நகரில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு பல குடும்பங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றன. அவர்கள் அனைவருக்கும் ரேஷன் அட்டை, மின்சார இணைப்பு முதலானவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால் குடிநீர் இணைப்பு மட்டும் வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் தேவைக்காகவும், வீட்டு பயன்பாடுகளுக்காகவும் சுமார் ஒரு கி.மீ. தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது.
Advertisement
இது தொடர்பாக அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குடிநீர் இணைப்பு வழங்குவது தொடர்பாக இந்தப் பகுதிக்கு வந்து அதிகாரிகள் ஆய்வு நடத்திச் சென்றனர். எனினும் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்று அந்த மனுவில் சின்னராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக தமிழக அரசும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியமும் இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.