முகப்பு
சென்னை

உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கு மாநில அரசுகள் ஆதரவு தர வேண்டும்

உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கு அனைத்து மாநில அரசுகளும் ஆதரவு தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பக்த சரண் தாஸ் கூறினார்.

Updated On : 22 ஜூலை, 2013 at 3:04 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM

உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கு அனைத்து மாநில அரசுகளும் ஆதரவு தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பக்த சரண் தாஸ் கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உள்பட கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பக்த சரண் தாஸ் கூறியது:

Advertisement

மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதால் நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பல்வேறு தகவல்கள் வெளிக் கொணரப்பட்டு மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

இந்த இரண்டு திட்டங்களைப் போல உணவுப் பாதுகாப்புத் திட்டம் என்ற புரட்சிகரமான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான வரைவு மசோதா 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில் 9 முறை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது மத்தியத் தொகுப்பில் இருந்து மாநில அரசுக்கு ஒரு கிலோ அரிசி ரூ.5.65-க்கு வழங்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, மாநில அரசுகளுக்கு ஒரு கிலோ அரிசி ரூ.3-க்கு வழங்கப்படும். மாநில அரசு தற்போது 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது. இதனை 35 கிலோவாக உயர்த்தி வழங்க முடியும்.

இந்தத் திட்டத்துக்காக உணவுப் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். அந்த மையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும். இந்தத் திட்டத்தால் மாநில அரசின் உரிமை எந்த வகையிலும் பறிபோகாது. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியிருந்த கடிதத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

அது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்படும்.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கு அனைத்து மாநில அரசுகளும் ஆதரவு தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.