ஸ்லோவாக்கியாவில் பிரட், உப்பு கொடுத்து பிரதமர் மோடியை வரவேற்றது ஏன்?
ஸ்லோவாக்கியாவுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு பிரட் (ரொட்டி) - உப்பு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து...
ஸ்லோவாக்கியாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி பிரட் (ரொட்டி) - உப்பு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்மூலம், 1993 ஆம் ஆண்டு ஸ்லோவாக்கியா விடுதலை பெற்ற பிறகு முதல்முறை செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்லோவாக்கியாவுக்கு பிரதமா் மோடி ஒரு வார கால அரசுமுறைப் பயணத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.
Advertisement
Advertisement
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். புத்தாக்கம், வா்த்தகம், முதலீடு, நிலையான வளா்ச்சி, பாதுகாப்பு, கலாசாரம், மக்கள் ரீதியிலான தொடா்புகள் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 15) ஸ்லோவாக்கியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். தலைநகர் பிராடிஸ்லாவாவில் பிரதமருக்கு வந்தே மாதரம் பாடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதேபோன்று ஸ்லோவாக்கியா நாட்டு சார்பில் ரொட்டி (பிரட்) மற்றும் உப்பு கொடுத்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:
''பிராடிஸ்லாவாவில் அளிக்கப்பட்ட வரவேற்பில், ரொட்டி மற்றும் உப்பு வழங்கும் பாரம்பரிய முறை இடம்பெற்றது. இது ஸ்லோவாக்கியாவின் வளமான கலாசார பாரம்பரியத்தையும், அவர்கள் போற்றும் நல்லெண்ணம் மற்றும் நட்புறவு விழுமியங்களை பிரதிபலிக்கிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.
ரொட்டி - உப்பு கொடுத்தது ஏன்?
ஸ்லோவாக்கியாவில் ரொட்டி கொடுப்பது, அந்நாட்டின் வளம் மற்றும் மிகுதியைக் குறிக்கிறது. அதுமட்டுமின்றி நாட்டிற்கு வரும் விருந்தினர் பசியுடன் இருக்கக் கூடாது என்ற பாரம்பரிய நோக்கத்திற்காகக் கொடுக்கப்படுகிறது.
இதேபோன்று விருந்தினர் மீதான மதிப்பு, நட்புறவு மற்றும் நம்பிக்கையை குறிப்பிடும் வகையில், ரொட்டியுடன் உப்பு வழங்கப்பட்டு வரவேற்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி ஸ்லோவாக்கியாவின் பாரம்பரிய இசையுடன் நாட்டுபுற நடனமாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். இதில் குழந்தைகள் பாரம்பரிய வண்ண உடைகளை அணிந்து நடனமாடினர். இதனை பிரதமர் மோடி கண்டு களித்தார்.
இதனைத் தொடர்ந்து பிராடிஸ்லாவாவில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டிருந்த விடுதி வாயிலில் கூடியிருந்த மக்கள் ஜெய் ஸ்ரீ ராம், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டு மோடியை வரவேற்றனர்.