முகப்பு
சென்னை

பூண்டி ஏரிக்கு மீண்டும் வரத் தொடங்கிய கிருஷ்ணா நீர்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) இரவு வந்து சேர்ந்தது.

Updated On : 22 ஜூலை, 2013 at 3:23 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) இரவு வந்து சேர்ந்தது.

விநாடிக்கு 10 கன அடி தண்ணீர் முதலில் வந்ததாகவும், தற்போது அதன் அளவு படிப்படியாக உயர்ந்து வருவதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின்படி, கடந்த 1-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து சேர்ந்த சில நாள்களில், கிருஷ்ணா நீர் வழித்தடத்தில் உள்ள உப்பளமடுகு கால்வாயில் கசிவு ஏற்பட்டது.

Advertisement

இதனால் ஆந்திரத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. கசிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 17-ஆம் தேதியன்று கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதையடுத்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டுக்கு சனிக்கிழமை தண்ணீர் வந்து சேர்ந்தது. அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு கிருஷ்ணா நீர் வந்தது.

இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆந்திரத்திலிருந்து தற்போது விநாடிக்கு 300 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வரும் நாள்களில் அதன் அளவு கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. பூண்டிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் சென்னையின் மற்ற குடிநீர் ஆதாரங்களுக்கு நீர் திறந்து விடப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.