ஆகஸ்ட் இறுதியில் பி.எட். கலந்தாய்வு: விரைவில் விண்ணப்ப விநியோகம்
பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பம் வரும் 7 அல்லது 8-ஆம் தேதிமுதல் விநியோகிக்கப்பட உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் 21 கல்லூரிகளில் 2,118 பி.எட். இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி வெலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நடத்துகிறது.
Advertisement
கலந்தாய்வுக்காக 12,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறியது:
2013-14 கல்வியாண்டுக்கான பி.எட். வகுப்புகளை செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் கண்டிப்பாக தொடங்கியாக வேண்டும். இல்லையெனில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
இதன் காரணமாக பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நடத்தி முடித்துவிட திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கலந்தாய்வு 7 நாள்களில் முடிக்கப்பட்டுவிடும்.
இதற்கான விண்ணப்பங்களை அச்சடிக்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. ஓரிரு நாள்களில் இந்தப் பணி முடிந்துவிடும். ஆகஸ்ட் 7 அல்லது 8-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும்.
வகுப்புகள் தொடக்கம்: செப்டம்பர் 9-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால், 2013-14 கல்வியாண்டுக்கான பி.எட். வகுப்புகள் செப்டம்பர் 10 அல்லது 11-ஆம் தேதி தொடங்கப்பட்டுவிடும் என்றார் அவர்.