தொழிலதிபர் கார் மோதியதால் படுகாயமடைந்த சிறுமியின் மருத்துவச் செலவுக்காக மேலும் ரூ.92 ஆயிரம் வழங்க உத்தரவு
சென்னையில் தொழிலபதிபரின் கார் மோதியதால் படுகாயமடைந்த சிறுமியின் மருத்துவச் செலவுக்காக மேலும் ரூ.92 ஆயிரம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் தொழிலபதிபரின் கார் மோதியதால் படுகாயமடைந்த சிறுமியின் மருத்துவச் செலவுக்காக மேலும் ரூ.92 ஆயிரம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 23-ஆம் தேதி நள்ளிரவு அதிவேகமாகவும், தாறுமாறாகவும் ஓடிய ஒரு கார் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே விபத்தை ஏற்படுத்தியது. அந்த விபத்தின் காரணமாக அங்கு சாலையோர நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் என்று கூறி எம்பீ குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Advertisement
இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைச் செயலாளர் எஸ்.ஜிம்ராஜ் மில்டன் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த ஜூன் முதல் வாரம் விசாரணைக்கு வந்த போது, விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையொன்றில் சிகிóச்சை பெற்று வரும் சிறுமி சுபாரஷிதாவின் மருத்துவச் செலவை ஏற்க ஷாஜி தரப்பில் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிறுமியின் மருத்துவச் செலவுக்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை ஷாஜி தரப்பு வழக்குரைஞர் கடந்த ஜூன் 5-ம் தேதி வழங்கினார்.
இந்நிலையில் சிறுமி தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், அந்தத் தொடர் சிகிச்சைக்கான செலவுத் தொகையையும் தொழிலதிபர் ஷாஜி வழங்க நீதிமன்றம் உத்தரவிடக் கோரி மனுதாரர் மில்டன் தரப்பு வழக்குரைஞர் சங்கரசுப்பு உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் வியாழனன்று முறையிட்டார்.
இது தொடர்பாக விசாணை மேற்கொண்ட தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்காக தொழிலதிபர் ஷாஜி மேலும் ரூ.92 ஆயிரம் வழங்குமாறு உத்தரவிட்டனர்.