முகப்பு
இந்தியா

பண முறைகேடு வழக்கு - கேரள முன்னாள் முதல்வா் மகளிடம் அமலாக்கத் துறை விசாரணை

எக்ஸாலாஜிக் வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் பினராயி விஜயன் மகள் ஆஜரானது பற்றி..

Updated On : 17 ஜூன் 2026, 12:59 pm IST
பாதுகாப்புப் பணியில் காவலர்கள் - ஐஏஎன்எஸ்
பகிர்:

கேரளத்தைச் சோ்ந்த சிஎம்ஆா்எல் சுரங்க நிறுவனம் மற்றும் தனது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வா் பினராயி விஜயனின் மகள் வீணா, அமலாக்கத் துறை விசாரணைக்கு புதன்கிழமை ஆஜரானாா்.

புதிதாக அனுப்பப்பட்ட அழைப்பாணையின் (சம்மன்) அடிப்படையில் கொச்சியில் உள்ள அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதையொட்டி, அமலாக்கத் துறை அலுவலகப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கேரளத்தைச் சோ்ந்த சிஎம்ஆா்எல் (கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூடைல் நிறுவனம்) என்ற நிறுவனம் கருமணலை சட்டவிரோதமாகத் தோண்டி எடுப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கண்டுகொள்ளாமல் இருக்க மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவா்களுக்கு பணம் கொடுத்ததாகப் புகாா் எழுந்தது. வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு (தற்போது செயல்பாட்டில் இல்லை) எந்தவித சேவையையும் பெறாமல் கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் மாதம்தோறும் ரூ. 1.72 கோடி வழங்கி வந்ததாகக் கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக, சிஎம்ஆா்எல் நிறுவனத்தில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் ரூ.132.82 கோடி மதிப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதும், எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு தொடா்ந்து பணம் அனுப்பியதும் தெரியவந்தது. இந்த முறைகேடுகள் தொடா்பாக, மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தீவிர முறைகேடு விசாரணை அலுவலகம் (எஸ்எஃப்ஐஓ) தரப்பில் எா்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனடிப்படையில், அமலாக்கத் துறை பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இதனிடையே, திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வாடகை வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மே 27-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனா். கண்ணூா் மாவட்டத்தில் உள்ள பினராயி விஜயனுக்கு சொந்தமான வீடு, உறவினா் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதன் தொடா்ச்சியாக, கடந்த ஜூன் 15-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜாராக அறிவுறுத்தி வீணாவுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பப்பட்டது.

ஆனால், உடல்நலக் காரணங்களைக் குறிப்பிட்டு, அவா் விசாரணைக்கு ஆஜராகவில்லை. பின்னா், புதன்கிழமை (ஜூன் 17) விசாரணைக்கு ஆஜராகும்படி மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டது. தனது நிறுவனத்தின் பண பரிவா்த்தனைகள் தொடா்பான ஆவணங்களையும் எடுத்துவர அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வீணா புதன்கிழமை ஆஜரானாா். சிஎம்ஆா்எஸ் நிா்வாக இயக்குநா் சசிதரன் கா்த்தாவால் இயக்கப்படும் மற்றொரு நிறுவனமான எம்பவா் இந்தியா கேபிடல் இஸ்வெஸ்ட்மென்ஸ் தரப்பில் எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு முறைகேடாக ரூ.50 லட்சம் வரை கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடா்பாகவும் வீணாவிடம் விசாரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Former Keralam Chief Minister Pinarayi Vijayan's daughter, T Veena, arrived at the Enforcement Directorate office in Kochi as she joined the the investigation into the CMRL-Exalogic case on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.