பாஜகவின் நலனுக்கு உதவுகிறாரா ராகுல் காந்தி? பினராயி விஜயன் காட்டம்!
ராகுல் காந்தியின் அணுகுமுறை, இந்தியா கூட்டணியை வலுப்படுத்தாது என்று பினராயி விஜயன் விமர்சித்தது பற்றி...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் அணுகுமுறை, பாஜகவின் நலனுக்கு உதவுவதாக கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் சனிக்கிழமை (ஜூன் 13) விமர்சித்தார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்ட இடது ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சியாக உள்ளது.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கம் வகித்து வருகிறது. இருப்பினும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இதையேதான் நடைபெற்று முடிந்த இந்தியா கூட்டணி கூட்டத்தின் போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி விமர்சனமாக வைத்தது. இதைத் தொடர்ந்து, கேரளத்தில் நிலவும் அரசியல் போட்டி காரணமாக பினராயி விஜயனைக் கட்டிப்பிடிக்க மாட்டேன் என்று இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியதாக செய்தி பரவியது.
இது குறித்து பினராயி விஜயன் தெரிவித்ததாவது:
ராகுல் காந்தி, நரேந்திர மோடியைக் கட்டிப்பிடித்த புகைப்படத்தை நாம் அனைவரும் பார்த்தோம். மோடியைக் கட்டிப்பிடித்த செயலுக்கு என் எதிர்ப்பு இல்லை. மாறாக, அவரது கருத்துகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் செய்தியை வெளிப்படுத்துகிறது.
ராகுல் காந்தியின் இந்த அணுகுமுறை இந்தியா கூட்டணியை வலுப்படுத்தாது. இது பெரும்பாலும் பாஜகவுக்கு உதவுவதாகவே முடிகிறது. இதுபோன்ற செயல்களின் மூலம், ராகுல் காந்தி பாஜகவின் நலன்களுக்குத் துணைபோகும் ஒரு சூழலை உருவாக்குகிறார்.
நாங்கள் மட்டுமல்ல; அகிலேஷ் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்களும், காங்கிரஸ் அல்லாத பிற முக்கிய கட்சிகளும் கூட்டத்தின் போது, காங்கிரஸின் நிலைப்பாட்டிற்கு எதிராகப் பேசினார்கள் என்று குறிப்பிட்டார் பினராயி விஜயன்.
Pinarayi Vijayan, the Leader of the Opposition in the Kerala Legislative Assembly, criticized Rahul Gandhi the Leader of the Opposition in the Lok Sabha and a Congress MP on Saturday (June 13), stating that his approach benefits the BJP.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.