பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: கேரள முதல்வர் விளக்கம்!
பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை குறித்து கேரள முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
கேரளத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை குறித்து அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன், வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக கடந்த மே 27 ஆம் தேதி கேரள முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.
இது குறித்து, இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பினராயி விஜயனிடம் பத்திரிகையாளர் ஒருவர், முதல்வர் வி.டி. சதீசன் ஏன் இதற்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பினராயி விஜயன், “கேரள முதல்வர் ஏன் இதற்குப் பதிலளிக்கவில்லை என்பது அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி” என்று கூறினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்ததாவது:
பினராயி விஜயன் வீட்டில் அமலாக்க சோதனை குறித்து, எப்போது பதிலளிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்வேன். அதற்கான உரிமை எனக்கு உண்டு. நான் ஓடி ஒளிபவன் அல்ல. இது மத்திய புலனாய்வு அமைப்பால் பதிவு செய்யப்பட்ட வழக்கு. இது பற்றி ஆராய்ந்த பிறகே என்னால் பதிலளிக்க முடியும்.
இதில் மாநில அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்தச் சோதனை குறித்து அரசுக்கோ அல்லது கேரள காவல்துறைக்கோ முன்கூட்டியே எந்தத் தகவலும் தெரியாது. அப்படியிருந்தும், உள்துறை அமைச்சர் நிலைமையைப் புரிந்துகொண்டு காவல்துறையினரை அனுப்பினார். இந்த சோதனைக்கு ராகுல் காந்தி ஆள்களை ஆனுப்பினாரா? இது பினராயி விஜயனின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு எதிரான அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்றால், அரசியல் ரீதியாகப் போராட்டம் நடத்த அவருக்கு உரிமை உண்டு.
நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட விசாரணை நடைபெறும்போது, அரசு தலையிட முடியுமா? ஆகையால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை எழுந்தபோது அரசு தலையிட்டது. பினராயி விஜயனின் வீட்டுக்கு முன்னால் நடந்தது ஒரு கடுமையான குற்றம். விசாரணை அதிகாரிகளைத் தாக்குவது ஒருபோதும் நடக்கக் கூடாத செயலாகும்” எனத் தெரிவித்தார்.