புதுவை இளைஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை
விழுப்புரம் அருகே, கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக, புதுவை இளைஞர் உள்பட 2 பேர் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
விழுப்புரம் அருகே, கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக, புதுவை இளைஞர் உள்பட 2 பேர் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சனிக்கிழமை இரவு 11 மணியளவில், கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் 2 பேர் இறந்து கிடந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்த விழுப்புரம் டிஎஸ்பி சங்கர், வளவனூர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீஸார் விரைந்து சென்று 2 உடல்களையும் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:
புதுவை அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). பிரபல ரவுடி. இவர் மீது புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.
மற்றொருவர் வானூர் அருகே இரும்பை கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் (38). கொத்தனார் வேலை செய்து வரும் இவர் மீதும் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. இருவரும் உறவினர்கள்.
சனிக்கிழமை மாலை பீட்டர், அவரது 3 வயது மகன் கௌசிக் தேவ் ஆகியோர் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்தனர். அங்கு மகனை விட்டுவிட்டு பீட்டரும், கார்த்திகேயனும் விழுப்புரம் அருகே வளவனூரில் உள்ள தீபக்ராஜ்(35) வீட்டுக்குச் சென்றனர்.
சமீபத்தில் பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டில் உள்ள நகைக் கடையில் கார்த்திகேயன், தீபக்ராஜ், பீட்டர் ஆகியோர் ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துள்ளனர். அதில் பங்கு கேட்டு தீபக்ராஜ் வீட்டுக்கு கார்த்திகேயன், பீட்டர் ஆகியோர் சென்றுள்ளனர். பங்கு கேட்டபோது இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த தீபக்ராஜ், தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் பயந்துபோன இருவரும் ரத்தம் சொட்டச் சொட்ட வெளியே ஓடி வந்தனர். சிறிதுதூரம் சென்றதும் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையறிந்த தீபக்ராஜ் வீட்டில் படிந்திருந்த ரத்தக்கறைகளை தண்ணீரால் கழுவிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் ஹர்போ கொலை நடந்த இடத்தில் இருந்து ஓடி தீபக்ராஜ் வீட்டு வாசலில் நின்றது. அவரது வீட்டில் இருந்து உடல்கள் கிடந்த இடம் வரை ரத்தம் சிதறி கிடந்தது. மேலும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இதுதொடர்பாக வளவனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய தீபக்ராஜை, இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
தீபக்ராஜ் மீது வளவனூர் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. வெளிமாவட்டங்களுக்கு சென்று கொள்ளையடித்து சில நாள்கள் இங்கு தலைமறைவாக இருந்து பின்னர் மீண்டும் வேறு மாவட்டத்துக்கு சென்று கைவரிசை காட்டி வந்தார்.
தற்போது பங்கு கேட்டபோது ஏற்பட்ட தகராறில் கூட்டாளியையும், அவரது நண்பரையும் கொலை செய்துள்ளார்.
÷கொள்ளையர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.