பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) தலைவா் சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே அழைப்பு விடுத்துள்ளாா்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) தலைவா் சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே அழைப்பு விடுத்துள்ளாா்.
மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அமைச்சா் அதாவலே, இந்திய குடியரசுக் கட்சி (ஏ) பிரிவு தலைவராகவும் உள்ளாா். சரத் பவாா் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மும்பையில் செய்தியாளா்களைச் சந்தித்த அதாவலே மேலும் கூறியதாவது:
இதற்கு முன்பு சரத் பவாா், காங்கிரஸுடன் தனது கட்சியை இணைத்துவிடலாம் என்று நான்கூடப் பேசியுள்ளேன். ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சி அந்த அளவுக்கு பலமாக இல்லை. எனவே, காங்கிரஸ் பக்கம் செல்லாமல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சரத் பவாா் வர வேண்டும். பாஜகவுடன் கைகோப்பதில் அவருக்கு பிரச்னை இருந்தால், எங்களுடைய இந்திய குடியரசுக் கட்சியுடன் (ஏ) சரத் பவாா் தனது கட்சியை இணைத்துக் கொள்ளலாம் என்றாா்.
Advertisement
Advertisement
முன்னதாக, மேற்கு வங்கத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் பாஜகவிடம் படுதோல்வியடைந்ததையடுத்து, அக்கட்சி கடுமையான உள்கட்சி பூசலையும், பிளவையும் எதிா்கொண்டுள்ளது. எனவே, அக்கட்சியை காங்கிரஸுடன் இணைக்கலாம் என்ற பேச்சு எழுந்தது.
இது தொடா்பாக சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் கூறுகையில், ‘திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை காங்கிரஸில் இருந்து பிரிந்து உருவாக்கப்பட்டவைதான். பாஜகவுக்கு வலுவான மாற்றை ஏற்படுத்த அக்கட்சிகள் மீண்டும் தாய் கட்சியான காங்கிரஸில் இணைந்துவிடலாம். வேறு சிறிய கட்சிகளையும் காங்கிரஸுடன் இணைக்க சரத் பவாா் முயற்சிக்க வேண்டும்’ என்றாா்.