முகப்பு
சென்னை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்படும்: ரயில்வே இணை அமைச்சர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் கோட்லா ஜெயசூர்ய ரெட்டி தெரிவித்தார்.

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 3:54 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் கோட்லா ஜெயசூர்ய ரெட்டி தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:

தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் இயங்கும் 800 ரயில்வே கேட்டுகளுக்கு மத்திய அரசின் சார்பில் 50 சதவீத நிதியும், மாநில அரசின் சார்பில் 50 சதவீத நிதியும் ஒதுக்கப்படும். அதைத்தொடர்ந்து தேவைக்கு ஏற்றவாறு மேம்பாலமோ அல்லது சுரங்கப் பாதையோ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் அனைத்து கேட்டுகளும் மூடப்படும். ஆண்டு ஒன்றுக்கு 120 முதல் 130 கேட்டுகள் வரை இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்டுகளுக்குள் முழுவதுமாக முடிக்கப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தை ரயில்வே முனையமாக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

ரயில்வே வாரியத்தில் போதுமான நிதி இல்லாத காரணத்தால் தொடங்கப்பட்ட திட்டங்களை நிறைவு செய்வதில் சற்று கால தாமதம் ஏற்படுகிறது. ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி ரயில்வே பாதுகாப்புப் படையில் 10 சதவீதம் பெண்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை-விழுப்புரம் இடையேயான 2-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஓர் ஆண்டுக்குள் முடிக்கப்படும். சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில்வே முனையமாக மாற்றுவதா அல்லது பாரம்பரியமிக்க கட்டடமாக பராமரிப்பதா என்று சர்வதேச வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி கூறினார்.

அதைத்தொடர்ந்து அவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது, பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்யும் கருவிகள் சரியாகச் செயல்படுகிறதா?, பயணிகளுக்குக் குறைந்த விலையில் வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா போன்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் ரயில் நிலையத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறை, ரயில்வே மருத்துவமனை, பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா, கூடுதல் பொது மேலாளர் ஜி.நாராயணன் உள்ளிட்ட ரயில்வே துறையின் முக்கிய பிரிவுகளின் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.