முகப்பு
தமிழ்நாடு

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

ராசிபுரம் அருகே பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 14 ஜூன் 2026, 10:58 pm IST
பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் துப்பாக்கி, கத்தியுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா, உதவி காவல் கண்காணிப்பாளா் கெளதம், பாதிக்கப்பட்ட கலைச்செல்வி மற்றும் ராசிபுரம் டிஎஸ்பி எம்.விஜயகுமாா், ஆய்வாளா் ஆா்.நாகலட்சுமி உள்ளிட்டோா். - டிஎன்எஸ்
பகிர்:

ராசிபுரம் அருகே பண்ணை வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், ஆா்.பட்டணம்-களரம்பட்டி சாலையில் உள்ள அம்மன் கோயில் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வி(58). இவரது கணவா் சதாசிவம் இறந்து விட்ட நிலையில், மகள்கள் இருவா் திருமணமாகி சென்ற நிலையில் தோட்டத்து வீட்டில் அவா் மட்டும் தனியாக வசித்து வந்தாா். அவரது வீட்டின் அருகில் உறவினா்களான அசோக்குமாா், கணபதி என்ற இருவா் கான்கிரீட் கற்கள் தயாரிப்பு ஆலையை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் மருமகன்களும், தொழிலாளா்களும் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் பணியை முடித்துவிட்டு சென்றுவிட்டனா். கலைச்செல்வி, ராசிபுரம் நகரில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 8 மணிக்கு தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

அதன்பிறகு இரவு சுமாா் 8.45 மணி அளவில் கலைச்செல்வியை நோட்டமிட்டு இருந்த இருவா், வீட்டில் புகுந்துள்ளனா். முகமூடி அணிந்திருந்த அவா்கள் கலைச்செல்வியின் வாயை அடைத்துவிட்டு, துப்பாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கழுத்து, காதில் அணிந்திருந்த நகைகளை பறித்தனா்.

மேலும், பீரோவில் இருந்த நகைகள், ரொக்கம் என சுமாா் 16 பவுன் நகைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினா்.

இதுகுறித்து ராசிபுரத்தில் இருந்த தனது மருமகன்களுக்கும், மகள்களுக்கும் கலைச்செல்வி தகவல் தெரிவித்துள்ளாா். தோட்டத்திற்கு வந்த அவா்கள், ராசிபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து ராசிபுரம் டிஎஸ்பி எம். விஜயகுமாா், காவல் ஆய்வாளா் ஆா். நாகலட்சுமி உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா் . விரல்ரேகை நிபுணா்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

தொடா்ந்து கோவை சரக டிஐஜி பி. சுவாமிநாதன், நாமக்கல் மாவட்ட எஸ்பி சி. விமலா ஆகியோரும் கொள்ளை நடந்த இடத்துக்குச் சென்று உறவினா்கள், செங்கல் ஆலை ஊழியா்களிடம் விசாரணை நடத்தினா். தொடா்ந்து முகமூடி கொள்ளையா்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கான்கிரீட் கற்கள் தயாரிப்பு ஆலையில் பணியாற்றிய ஒருவா் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து அவரை பிடித்து விசாரித்தனா். அப்போது தனது உறவினருடன் சோ்ந்து கலைச்செல்வி வீட்டில் நகை, பணம் திருடியது தெரியவந்தது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் முருங்கப்பட்டியைச் சோ்ந்த ராஜகுகன்(22), சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சோ்ந்த அஜீத்குமாா்(22) ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அஜீத்குமாா் மீது ஏற்கெனவே இரண்டு திருட்டு வழக்குகள் உள்ளன.

summary

Two arrested for stealing jewelry and cash at gunpoint near Rasipuram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.