முகப்பு
செய்திகள்

சமரசத்திற்கு வந்தார் நடிகர் வடிவேலு! மீண்டும் இம்சை அரசன் 24-ம் புலிகேசி!

 சிம்பு தேவன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தில் நடித்து காமெடி ஹீரோக்களின் வரிசையில் ஒரு ஐகானாகவே

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:23 PM
பகிர்:

 
சிம்பு தேவன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தில் நடித்து காமெடி ஹீரோக்களின் வரிசையில் ஒரு ஐகானாகவே புகழ்ப்பெற்றார் நடிகர் வடிவேலு. அதனை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் முடிவு செய்து 2017-ம் ஆண்டு, ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’படத்தை தயாரிக்க முடிவெடுத்தனர் தயாரிப்பாளர் ஷங்கர் - இயக்குநர் சிம்புதேவன் கூட்டணி.

அதனைத் தொடர்ந்து இப்படத்தின் ஃபோட்டோ ஷூட் நடந்து, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்தன. ஆனால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தாமதம் செய்துவந்தார் நடிகர் வடிவேலு. அவர் மீது ஷங்கர் புகார் அளித்தும், வடிவேலுவுக்கு இப்படத்தில் நடிக்க வழங்கப்பட்ட ரூ.1.50 கோடி ரூபாய் அட்வான்ஸை அவர் திருப்பித் தரவில்லை. மேலும் படத்துக்காக ரூ.6 கோடி செலவில் பிரமாண்டமான அரங்கொன்றை சென்னைக்கு அருகே வடிவமைத்திருந்தனர் படக்குழுவினர்.

ஆனால் குறித்த நாளில் படப்பிடிப்பில் வடிவேலு வரவில்லை என்றும், திரைக்கதையில் தலையிடுவதாகவும், படத்தின் இயக்குநர் சிம்புதேவன், வடிவேலு மீது புகார் கூறினார். அதனால் இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னதாகவும் செய்தி வெளியாகியது. போலவே படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமலும், படக்குழுவுக்குப் போதிய ஒத்துழைப்பு தராமலும் இருந்து வந்ததாக வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் ஷங்கர்.  

இதனைத் தொடர்ந்து வடிவேலுவிடம் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது சங்கம். அதற்கும் வடிவேலு அசைந்து கொடுக்காததால், இந்தப் பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கம் இறுதி முடிவு எடுத்துள்ளது. 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படப்பிடிப்பில் வடிவேலு கலந்து கொள்ள வேண்டும் என்றும், மறுத்தால், அரங்கு அமைக்கத் தயாரிப்பாளர் செலவிட்ட பணமான ரூ.6 கோடியையும், அட்வான்ஸ் தொகையையும் சேர்த்து வட்டியுடன் ரூ.9 கோடியை வடிவேலு திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து அதனை வடிவேலுவிடம் தெரிவித்தது.
 
வேறு வழியின்றி நடிகர் வடிவேலு மீண்டும் படத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட காலம் நிலுவையில் இருந்த இந்தப் பிரச்னை, இருதரப்பினரின் சுமுகமான பேச்சு வார்த்தையில் முடிவுக்கு வந்துவிட்டது என்றனர் படக்குழுவினர். இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.