பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை வைத்துத் தான் படம் எடுத்தேன்! இயக்குநராக மாறிய பத்திரிகையாளர் மு.மாறன் பேட்டி!
அண்மையில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அண்மையில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் படத்திலேயே அழுத்தமான தடத்தைப் பதித்துள்ள இயக்குநர் மு.மாறன் பத்திரிகையாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர். கெமிக்கல் டெக்னாலஜியில் டிப்ளமோ முடித்தபின் பத்திரிகையாளராக வேலை செய்து கொண்டிருந்தவர், சினிமா மீதான ஈர்ப்பினால் வேலையை விட்டுவிட்டு இயக்குநராகும் கனவுடன் கோலிவுட் பக்கம் சென்றவர்.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் ‘ஆறுமுகம்’ கே.வி.ஆனந்தின் கோ, ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா-2’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக வேலை செய்தபின் தனியாக படம் இயக்கும் முயற்சியில் இறங்கினார். மரகத நாணயம் படத்தை தயாரித்த டில்லி பாபுவிடம் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் கதையை சொன்னதும் அவருக்குப் பிடித்துவிட்டது. அருள்நிதியிடம் கதை சொன்னபோது அவரும் உடனே சரி பண்ணலாம் என்று கூறவே இரவுக்கு ஆயிரம் கண்கள் உயிர் பெற்றது. சாம் சி.எஸ். இசையமைப்பில், அருள்நிதி, ஆனந்த்ராஜ், அஜ்மல், மகிமா நம்பியார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார்.
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. தனது முதல் படத்தைப் பற்றி இயக்குனர் மு. மாறன் கூறியது, ‘நான் பத்திரிகையாளராக பலவருடம் பணிபுரிந்த பின் திரைத்துறைக்கு வந்துள்ளேன். என்னுடைய முதல் படம் த்ரில்லர் ஜானரில் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ஹீரோ ஒரு கால் டாக்ஸி ட்ரைவர். ஓரிரவு எதிர்பாராத விதமாக அவர் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள, அதிலிருந்து அவர் எப்படி தப்புகிறார் என்பதை மையமாக வைத்துத்தான் இதன் திரைக்கதையை உருவாக்கினேன். இதிலுள்ளெ மெசேஜ் என்னவென்றால், யாரையுமே ஈஸியா நம்பிடாதீங்க. நல்லவங்களா இருக்குறவங்களுக்குக் கெட்ட சகவாசம் கிடைச்சதும், அவங்களும் கெட்டவங்களா மாற வாய்ப்பு நிறையா இருக்கு. என்பதுதான்.
Advertisement
இந்தக் கதையை எப்படி தேர்ந்தெடுத்தேன்னா தினமும் நாம் பத்திரிகைகளை படிக்கின்றோம். அதில் பலவிதமான செய்திகளை தினமும் கடந்து விடுகிறோம். அது போன்ற செய்திகளை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை எழுதினேன். சினிமாவுக்காக சில மாற்றங்களை திரைக்கதையில் செய்தேன். உண்மை சம்பவங்களை அடிப்படையா வைத்து எடுக்கும் போது நம்பகத்தன்மையும் அழுத்தமும் கிடைக்குது. அடுத்த படமும் ஒரு க்ரைம் த்ரில்லர் தான். கதை எழுதி முடித்துவிட்டேன். மூன்றாவது படமும் த்ரில்லர்தானா என்று இப்போதே கேட்கிறார்கள். வெவ்வேறு வகையில் படம் எடுக்கத் தான் ஆசைப்படுகிறேன். நான் ஷார்ட் பிலிம், டெலி ப்லிம் என்று எதுவுமே எடுத்ததில்லலி. ஒரு வெப்சீரீஸ் பண்ணனும்னு ஆசைப்படறேன். ஆனாலும் சினிமா தான் என் முதல் விருப்பம்’ என்று மனம் திறந்து கூறினார் மாறன்.