இளையராஜா பயோபிக்... திரைக்கதை, வசனம் எழுதும் எஸ். ராமகிருஷ்ணன்!
இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக் திரைப்படத்தின்
இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக் திரைப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதுகிறார்.
இளையராஜா பயோபிக்கில் நடிகர் தனுஷ் இதில் நாயகனாக நடிக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
பண்ணைபுரத்தில் இளையராஜாவின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதற்காக 1950-களின் பண்ணைபுரத்தை செட் மூலம் அமைக்க அருண் மாதேஸ்வரன் முடிவு செய்துள்ளார். இவரும் இளையராஜாவும் அடிக்கடி சந்தித்து படத்தில் என்னென்ன காட்சிகள் எப்படி இடம்பெற வேண்டும் என்பது குறித்து பேசி வருவதாகவும் தகவல்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இணையப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பணியாற்றுகிறேன். அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மூன்று மாதங்களுக்கு முன்பாக அழைத்திருந்தார். திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து திரைக்கதை உருவாக்கப் பணியில் இணைந்து கொண்டேன்.
இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் சென்று அவரது சொந்த வீடு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவர் விளையாடி மகிழ்ந்த இரட்டை ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைக் கண்டோம். அத்துடன் ஊர்மக்களைச் சந்தித்து உரையாடினோம்.
இதையும் படிக்க: பாடலுடன் துவங்கிய விஜய் - 69 படப்பிடிப்பு!
இளையராஜாவின் பழைய நேர்காணல்கள், பத்திரிக்கைச் செய்திகள் அவரது பழைய புகைப்படங்கள், காணொளிகள் எனச் சேகரித்துக் கொண்டேன். அவர் குறித்து வெளியான தகவல்கள் மற்றும் தொடர் கட்டுரைகளைத் தேடித்தேடி வாசித்தேன். அவர் கடந்து வந்த பாதை வலியும் வேதனையும் நிரம்பியது. தமிழ் திரையிசையில் அவரது சாதனைகள் நிகரற்றவை. இசையின் மானுட வடிவமே இளையராஜா.
அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவம். இப்படம் அவரது திரைவாழ்வில் மிக முக்கியப் படமாக அமையும்.
இரண்டு மாத கால தொடர் விவாதங்களுக்குப் பிறகு திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசன வடிவை எழுதி இயக்குநருக்குக் கொடுத்துள்ளேன். அவரது திருத்தம் மற்றும் மாற்றங்களுக்குப் பின்பு திரைக்கதையின் இறுதி வடிவம் உருவாகும். இளையராஜாவின் இசை கேட்டு வளர்ந்த எனக்கு அவரது படத்தில் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது பெருமகிழ்ச்சியைத் தருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ரசிகர்களைக் கவர்ந்த மன்மதன் தெலுங்கு மறுவெளியீடு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.