ஆகாஷ் பாஸ்கரனால் பராசக்தி படப்பிடிப்பு பாதிக்கப்படுமா?
பராசக்தி படப்பிடிப்பு குறித்து...
இயக்குநர் சுதா கொங்காரா, சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் பராசக்தி படத்தின் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி, மதராஸி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.
இதில், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் மதராஸி முதலில் திரைக்கு வருகிறது.
Advertisement
அதேபோல், சில மாதங்களுக்கு முன் துவங்கிய பராசக்தி படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஆனால், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் துவங்காமல் இருக்கிறது. இதுகுறித்து பேசிய சுதா கொங்காரா, “ மதராஸி படப்பிடிப்பை சிவகார்த்திகேயன் முடித்ததும் பராசக்தி படப்பிடிப்பு துவங்கும். இன்னும் 40 நாள்களுக்கான படப்பிடிப்பு மீதம் இருக்கிறது.” என்றார்.
ஆனால், படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கையால் படப்பிடிப்பு பாதிக்கப்படலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாஸ்மாக் டெண்டரில் ரூ. 1000 கோடி வரை முறைகேடு நடந்ததாக அமலாகத்துறை விசாரணையில் தெரிய வந்ததால் இவ்வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் ரத்தீஸையும் அவரின் நண்பர் ஆகாஷ் பாஸ்கரனையும் அமலாக்கத்துறையினர் தேடி வருகின்றனர். இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
விசாரணையில் ஆஜராகி ஆகாஷ் குற்றமற்றவர் எனத் தெரிந்த பிறகே அவர் தயாரித்துவரும் படங்களின் அடுத்தக்கட்ட பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: ‘மோசம்..’ ஷங்கர் மீது கேம் சேஞ்சர் எடிட்டர் குற்றச்சாட்டு!