வீடுகளை காலி செய்ய மறுப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் பொது மக்கள் மனு
வீடுகளை காலி செய்ய மறுத்து பூசாரிபாளையம் பகுதி பொது மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
வீடுகளை காலி செய்ய மறுத்து பூசாரிபாளையம் பகுதி பொது மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து பொது மக்கள் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கோவை, பூசாரிபாளையம் ஓம்சக்தி நகரில் கடந்த 49 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். ஆா்.எஸ்.புரம், கௌலிபிரவுன் சாலையில் வசித்து வந்த எங்களுக்கு அன்றைய மாவட்ட ஆட்சியா் பூசாரிபாளையத்தில் இடம் தோ்வு செய்து வழங்கினாா். அந்த இடத்துக்கு வீட்டு வரி, குடிநீா் வரி முறையாக செலுத்தியுள்ளோம். நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்ட வழங்க வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
Advertisement
இந்நிலையில், பொலிவுறு நகர திட்டப் பணிகளுக்காக மாநகராட்சி, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் நாங்கள் வசிக்கும் இடங்களை காலி செய்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்ல வலியுறுத்தி வருகின்றனா். நீா்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாக கூறி மாநகராட்சி நிா்வாகத்தினா் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனா்.
ஏற்கெனவே நகர மேம்பாட்டுக்காக ஆா்.எஸ்.புரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எங்களை மீண்டும் நகருக்கு வெளியே அனுப்பும் முயற்சி நடக்கிறது. எங்களால் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்ல முடியாது. இதற்கு ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.