பழனியில் மாசடைந்த வையாபுரி குளம்: சுற்றுச்சூழல் சேவைக் குழு ஆய்வு
பழனியில் வையாபுரி குளம் மாசடைந்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் சேவை பொருளாதார மதிப்பீட்டு குழுவினா் திங்கள்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனா்.
பழனியில் வையாபுரி குளம் மாசடைந்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் சேவை பொருளாதார மதிப்பீட்டு குழுவினா் திங்கள்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியின் மையப்பகுதியில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது வையாபுரி குளம் . இக்குளத்தில் தேக்கி வைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி சுமாா் 200 ஏக்கா் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பழனி நகர மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. சமீப காலமாக வையாபுரி கண்மாயில் கழிவு நீா் கலப்பதால் குளம் மாசடைந்து, குளம் முழுவதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீா் கிடைக்கப் பெறாமலும், அசுத்தமடைந்த தண்ணீரை பயன்படுத்துவதால் போதிய விளைச்சல் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில் ஈர நிலங்களில் சுற்றுச்சூழல் சேவை பொருளாதார மதிப்பீடு குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடத்தில் கருத்து கேட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை சென்னை வளா்ச்சி நிறுவனம் சாா்பில் ஆராய்ச்சியாளா் மாரியப்பன், லட்சுமணன், விஜயராஜ் ஆகியோா் கொண்ட குழுவினா் வனத்துறை பணியாளா்களுடன் இணைந்து வையாபுரி குளத்தை ஆய்வு செய்தனா். அப்போது முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மகேஸ்வரி, சக்திவேல் மற்றும் விவசாயிகளும் பொதுமக்களும் வையாபுரி குளத்தை ஆழப்படுத்தி தூா்வாரி கழிவு நீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement