முகப்பு
கட்டுரைகள்

'ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 121: பாலசிங்கம் லண்டன் தப்பினார்!

அமைதிப்படையின் தீவிர தேடுதலில் சிக்கிய பாலசிங்கமும், டேவிட்டும், பொட்டு அம்மானும் ஒவ்வொரு மறைவிடமாக அலைந்தனர். ஒவ்வொரு வீட்டுக்கும் இவர்கள் தப்பிச் செல்லுகையில் பொட்டு அம்மானை முதுகில் தூக்கிக் கொண்டு

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:46 PM
பகிர்:

அமைதிப்படையின் தீவிர தேடுதலில் சிக்கிய பாலசிங்கமும், டேவிட்டும், பொட்டு அம்மானும் ஒவ்வொரு மறைவிடமாக அலைந்தனர். ஒவ்வொரு வீட்டுக்கும் இவர்கள் தப்பிச் செல்லுகையில் பொட்டு அம்மானை முதுகில் தூக்கிக் கொண்டு போராளியொருவர் உடன் வருவது என்பது சாத்தியமற்றதானது. எனவே அவர் மருத்துவ வசதி பெறவும், உயிர் பிழைக்கவும் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டார். காயம்பட்ட இதர போராளிகளுக்குத் தனி ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்தப்பகுதியின் பொறுப்பாளராக இருந்த சுக்ளாவின் நட மாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. அவரை அமைதிப்படைக்குத் தெரியாததால் அவரையும், புலிப்போராளிகளையும் அடையாளம் காட்ட "முகமூடி' தரித்த ஒற்றர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

இவர்கள் கண்கள் மட்டும் தெரியும்படி முகத்தைத் துணியால் மறைத்தபடி, கூட்டத்தில் நிற்பார்கள். அவர் புலிகளை அடையாளம் கண்டதும் ராணுவ வீரருக்கு "தலையை ஆட்டி' சைகை செய்வார். உடனே கைது வேட்டை நடக்கும். இதன் காரணமாக சுக்ளாவும் வெளிப்படையாக நடமாட முடியவில்லை.

Advertisement

அடேல், வெள்ளைக்காரப் பெண்ணாக இருப்பதால் இவரையும், இவருடன் சேர்ந்த ஆட்களையும் தேடுவதில் அமைதிப்படை முனைப்பு காட்டியது. எனவே, இவர்களை வேறு வேறு இடங்களில் தங்கவைப்பது என்பது குறித்த ஆலோசனைகளுக்கு அடேல் உடன்படவில்லை.

நவிண்டியில் ரதி என்பவரது வீட்டில், அவரது ஆதரவுடன் பதுங்கியிருக்கையில் இவர்களைத் தேடி, புலிகளுடைய வடமராட்சித் தளபதி சூசை வந்தார். சூழ்நிலையும், கடல்மார்க்கமும் சாதகமாக இருக்கும்போது, அவர்களிருவரையும் தமிழ்நாட்டுக்கு அனுப்ப பிரபாகரன் உத்தரவிட்டிருப்பதாக கூறினார். (ஆதாரம்: சுதந்திரவேட்கை - அடேல் பாலசிங்கம்).

வடமராட்சியில் மாலை ஆறு மணியிலிருந்து காலைவரை ஊரடங்கு சட்டம் அமல் செய்யப்பட்டது. காரணம், புலிகள் இரவு வேளையில் அங்கிருந்து நழுவுகிறார்கள் என்று கிடைத்த தகவலின் எதிரொலியாகும்.

ஆனால், மக்கள் புலிகளாய் இருந்தார்கள். அதனால் அவர்கள் கைதுக்கும், கொடுமைகளுக்கும் ஆட்பட்டதுடன் மரணத்தையும் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனாலும் அவர்களின் உறுதியைக் குலைக்க முடியவில்லை.

உள்ளூர் மனிதர்களைப் பார்த்து நாய் குரைப்பதில்லை. ஆனால் இந்திய அமைதிப் படையினரைப் பார்த்து குரைத்துத் தீர்த்து வீடும். இப்படி நாய் குரைப்பதைக் கேட்டு, அதன் அடிப்படையில் புலிகளின் நடமாட்டம் இருக்கும்.

பல இடங்கள் மாறிய வேளையில், தமிழ்நாட்டுக்குப் புறப்படும் நேரம் வந்தது. அந்நிலையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இறந்த செய்தி வந்திருந்தது. அன்று அமைதிப்படை தனது முகாமைவிட்டு வெளியேறாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வடமராட்சியின் ஒரு மூலையில் இருந்து படகில் புறப்பட ஏற்பாடு ஆகியிருந்தது. அனைவரிடமும் விடைபெற்று, பாலசிங்கமும், அடேலும் படகில் ஏறினர். அவர்களுடன் வேறு சிலரும் ஏறிக்கொண்டனர். கடல் கொந்தளிப்பாக இருந்தது. கரையை விட்டுப் படகு விலகி, கடலுக்குள் செல்லச் செல்ல அடேலுக்கு சோகம் கவ்விக்கொண்டது.

இது குறித்து அவர் தனது நூலில் குறிப்பிடுகையில், "நமது நம்பிக்கைக்குரிய நண்பர்களை ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்துக்குள் கைவிட்டுச் செல்லும் உணர்வே என்னுள் மிதந்து வந்தது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களோடு வாழ எண்ணிய நான், எனக்கு உதவி புரிந்த மக்களை அவர்களது கையறு நிலையில் விட்டுச் செல்வது துயரமாக இருந்தது' என்று கூறியுள்ளார்.

தமிழகம் வந்து, அதுவும் பாதுகாப்பற்றதாகிப் போன நிலையில், பெங்களூர் சென்றனர்.

1988 ஏப்ரலில் பெங்களூரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த ஆன்டன் பாலசிங்கத்துக்கு, திமுக தலைவர் மு.கருணாநிதியிடமிருந்து அவசரச் செய்தி வந்ததாகவும், அந்த அவசரச் செய்தியில் "தன்னை சந்திக்கும்படி' அவர் கூறியிருந்ததையொட்டி, இரவோடு இரவாக பெங்களூரிலிருந்து சேலம் புறப்பட்டதாகவும் தனது "வார் அண்ட் பீஸ்' நூலில் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

அந்நூலில், அச்சந்திப்பைப் பற்றி விவரிக்கின்றார்: ""சேலம் ஓட்டல் ஒன்றில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது முரசொலி மாறனும் உடனிருந்தார். திமுக தலைவர் மு.கருணாநிதி பேசும்போது, "மிகப்பெரிய அமைப்பான இந்திய ராணுவத்துடன் போரிட விடுதலைப் புலிகளால் முடியுமா?' என்று கேள்வியெழுப்பியதுடன், "மோதல் போக்கை தவிர்க்குமாறும்' ஆலோசனை வழங்கினார்.

இதற்குப் பதிலளித்த பாலசிங்கம், "பிரபாகரனும் இதர போராளிகளும் புனிதமான நோக்கம் ஒன்றிற்காக உயிரிழக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர்கள் சரணடைவதையும் அதன் பின்னர் ஏற்படும் நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இல்லையென்றும், போராளிகள் கொரில்லா யுத்தத்தில் சாதனை படைப்பார்கள் என்றும் அதற்கான மன உறுதி அவர்களிடம் இருப்பதாகவும்' விளக்கினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ""பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி, தில்லியில் ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பு, எங்களுக்கு அளித்த உறுதிமொழிப்படி, இடைக்கால அரசு என்ற தீர்வு அமைதியான வழியில் ஏற்பட, அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கவும், புலிகள் தயாராக இருக்கிறார்கள்'' என்றார்.

இதைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தியை முரசொலி மாறன் சந்தித்து, விடுதலைப் புலிகளின் விருப்பத்தையும் நிபந்தனைகளையும் கூறியபோது, அந்தச் செய்தி ராஜீவ் காந்திக்கு உவப்பாக இல்லை.

""புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுச் சரணடைய வேண்டும் அல்லது இந்திய ராணுவத் தாக்குதலை சந்திக்கவேண்டும்'' என்று ராஜீவ் கூறியதாகப் பின் நாளில் முரசொலி மாறன் தன்னிடம் கூறியதாக பாலசிங்கம் தனது நூலில் (பக்.129-130) குறிப்பிட்டுள்ளார்.

இதே நிகழ்வை பழ.நெடுமாறனும் தனது நூல் ஒன்றில், திருகோணமலையில் சந்தித்தபோது பாலசிங்கம் தன்னிடம் கூறியதாகப் பதிவு செய்திருக்கிறார்.

மேலே குறிப்பிட்ட சந்திப்புக்குப் பிறகுதான் ஆன்டன் பாலசிங்கமும் அடேலும் சென்னை திரும்பி, ஒரு மாற்று ஏற்பாட்டில் லண்டன் சென்றதாக, அடேல், தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments