பொறியியல், மருத்துவம் ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு
பி.இ.-பி.டெக்., எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதலாம் ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க சென்னையில் இன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.
பி.இ.-பி.டெக்., எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதலாம் ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க சென்னையில் இன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நண்பகல் 12 மணிக்கு ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.
பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
Advertisement
உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம் உள்ளிட்டோர் முன்னிலையில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெயர்களுடன் பி.இ., பி.டெக். ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தரவரிசைப் பட்டியலோடு, கலந்தாய்வுக்கான தேதி, நேரம், விண்ணப்பத்தின் நிலை, விண்ணப்பத்தில் உள்ள குறைகள் போன்ற தகவல்களும் அண்ணா பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.
பி.இ. படிப்பில் விளையாட்டுப் பிரிவுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 17-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஜூன் 20ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூன் 21-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறுகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலக வளாகத்தில் 28 ஆயித்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெயர்களுடன் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ரேங்க் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி வெளியிடுகிறார். ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டவுடன், சுகாதாரத் துறையின் இணையதளத்தில் www.tnhealth.org இல் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.
விளையாட்டில் சிறந்து விளங்குவோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 18ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூன் 19 அல்லது ஜூன் 20-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.