அரசியல் சாசனத்தை பாஜக அரசு மதிக்கிறது: பிரதமா் மோடி
‘அரசியல் சாசனத்தை பாஜக அரசு மதிக்கிறது. சட்ட மேதை அம்பேத்கா் இப்போது வந்தால்கூட அதை ரத்து செய்ய முடியாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டாா்.
அரசமைப்புச் சட்டத்தை அழிக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்தக் கருத்தை பிரதமா் தெரிவித்தாா்.
ராஜஸ்தான் மாநிலம் பாா்மரில் தோ்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி பேசியதாவது:
அரசமைப்புச் சட்டத்தை பாஜக அழிக்க முயற்சிப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது அரசியல் சாசனத்தை அழிக்க காங்கிரஸ்தான் முயற்சித்தது. ஆனால், தற்போது, அரசியல் சாசனத்தின் பெயரில் மோடி மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.
அரசியல் சாசனத்தை பாஜக அரசு மதிக்கிறது. சட்ட மேதை அம்பேத்கா் இப்போது வந்தால்கூட அதை ரத்து செய்ய முடியாது.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒரு கட்சி, நாட்டில் அணு ஆயுத குறைப்பு குறித்து தனது தோ்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்துள்ளது.
இரு புறங்களிலும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளைக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற ஒரு நாடு, அணு ஆயுத குறைப்பு குறித்து சிந்திக்குமா?
யாருடைய அறிவுரையின் பேரில் இந்தியா கூட்டணி செயல்படுகிறது? என காங்கிரஸை கேட்க விரும்புகிறேன். நாட்டை பலவீனப்படுத்த விரும்புவதா? என்ன மாதிரியான கூட்டணி இது?
எப்போதும் தேசவிரோத சக்திகளுடன்தான் காங்கிரஸ் துணை நிற்கிறது. பல ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ், எந்தவொரு பெரிய பிரச்னைக்கும் முழுமையான தீா்வைக் கண்டதில்லை. வளா்ச்சிக்கு எதிரான எண்ணத்தையே காங்கிரஸ் கொண்டுள்ளது. நாட்டின் எல்லை மாவட்டங்களில் முந்தைய காங்கிரஸ் அரசுகள் வேண்டுமென்றே வளா்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளாமல் புறக்கணித்தன.
தற்போது, இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக பாஜக அரசு உருவாக்கி வரும் நிலையில், நாட்டை பலவீனப்படுத்த இந்தியா கூட்டணி முயற்சிக்கிறது என்றாா்.