எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்!
தஞ்சாவூரில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியும், அமமுகபொதுச்செயலர் டிடிவி தினகரனும் இணைந்து ஒன்றாக தேர்தல் பிரசாரம் செய்தனர்.
தஞ்சாவூரில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியும், அமமுகபொதுச்செயலர் டிடிவி தினகரனும் இணைந்து ஒன்றாக தேர்தல் பிரசாரம் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டுப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலர் டிடிவி.தினகரன் இணைந்து தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூர் என்றால் பொன் விளையும் பூமி. இந்த பூமியை ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க புரிந்துண்ர்வு ஒப்பந்தம் போட்டார். அப்படி உங்கள் நிலத்தை அபகரித்தவர் ஆட்சி தொடர வேண்டுமா..?
Advertisement
நான் ஒரு விவசாயி, இன்றும் விவசாயம் செய்கிறேன். நம் பூமியை ஸ்டாலின் அபகரித்து பல்வேறு தொழில்களுக்குக் கொடுக்க முயற்சித்தார். அதிமுக அரசு எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது காவிரி பிரச்னைக்கு நீதிமன்றம் சென்றது. அவருக்குப் பின்னர் அம்மா நியாயத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அம்மா இருக்கின்றபோதே நாம் தீர்ப்பை பெற்றோம். ஆனால் திமுக மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் இதில் கவனம் செலுத்தவில்லை. அம்மா தொடர்ந்த வழக்கை நாம் தொடர்ந்து நடத்தி, விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்கும் வகையில் தீர்ப்பு பெற்றோம். விவசாயிகள் கனவை நனவாக்கியது அதிமுக அரசு.
நமக்கு கிடைக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்ற தீர்ப்பைப் பெற்றோம். அப்போது அதிமுக, பாஜக கூட்டணி இருந்தும், அந்த தீர்ப்பை அமல்படுத்த காலதாமதம் ஆனது. எனவே விவசாயிகள் கோரிக்கையின் பேரில் அதிமுக 37 எம்.பிக்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றக் கோரி நாடாளுமன்றத்தை 22 நாட்கள் ஒத்திவைத்தோம். திமுக அப்படி செய்ததா? நீட்டுக்காக அப்படி குரல் கொடுத்தார்களா..?
பாஜக அரசு துரோகம் செய்கிறது என்கிறார் ஸ்டாலின். அந்தக் கட்சியோடு தான் நீங்கள் 1999, 2001 தேர்தல்களில் கூட்டணி வைத்து, மத்திய அரசிலும் அங்கம் வகித்தீர்கள். இந்த போட்டோவைப் பாருங்கள். வாஜ்பாயை எப்படி காக்கா பிடிக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் கூட்டணி வைத்தால் நல்ல கட்சி, நாம் கூட்டணி வைத்தால் மதவாதக் கட்சியா? இதுதான் சந்தர்ப்பவாத அரசியல்.
அதிமுக வாக்குகள் சிதறாமல், மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக கூட்டணி வைத்தோம். ஒத்த கருத்துடன் நாங்கள் இருக்கிறோம். இது இயற்கையான கூட்டணி.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது கூட நிதி பெற்றுக் கொடுக்கவில்லை. இப்போது திட்டமிட்டு பாஜகவை விமர்சிக்கிறார்.
அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடம் வைத்த கோர்க்கைகள் எல்லாம் நிறைவேற்றியது. நெடுஞ்சாலை, விமான நிலையம், ரயில் பாதை எல்லாம் கொடுத்தார்கள், புதிய ரயில்கள் கொடுத்தனர். இப்போது இணக்கமான சூழல் இல்லை, எப்போது பார்த்தாலும் பாஜகவை விமர்சித்தால் எப்படி நிதி கிடைக்கும்?
பாஜக, திமுக வெவ்வேறு கொள்கை கொண்ட கட்சிகள். தேர்தல் நடக்கும் வரை வேறுபாடு இருக்கலாம், தேர்தல் முடிந்த பின்னர் மக்களுக்கு நன்மை செய்வது கட்சிகளின் கடமை. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். இந்த ஐந்து ஆண்டு காலம் பல்வேறு பலன்கள் கிடைக்காமல் போனது.
மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதாக கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் சொல்கிறார், அவரை அழைத்துவந்துப் பிரசாரம் செய்கிறார் ஸ்டாலின். எவ்வளவு பெரிய துரோகம்..? இவர்களுக்கு அதிகாரம் தான் முக்கியம். மக்கள் முக்கியமல்லை. மேக்கேதாட்டுவில் அணை கட்டிவிட்டால் டெல்டா பாலைவனமாகிவிடும். நமக்கு துரோகம் செய்பவருடன் பிரசாரம் செய்யும் முதல்வருக்கு சந்தர்ப்பம் கொடுக்காதீர்கள் என அவர் தெரிவித்தார்.