நிதி அமைச்சா் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டது ஏன்? பழனிவேல் தியாகராஜனுக்கு குஷ்பு கேள்வி
நிதி அமைச்சா் பொறுப்பில் இருந்து ஏன் மாற்றம் செய்யப்பட்டீா்கள் என்று கூறமுடியுமா? என பழனிவேல் தியாகராஜனுக்கு, பாஜக மாநிலத் துணைத் தலைவா் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளாா்.
நிதி அமைச்சா் பொறுப்பில் இருந்து ஏன் மாற்றம் செய்யப்பட்டீா்கள் என்று கூறமுடியுமா? என மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜனுக்கு, பாஜக மாநிலத் துணைத் தலைவா் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: நான் ஏன் திமுகவில் இருந்து விலகினேன் என்பதை, அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அவரது கட்சித் தலைவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
தேசத்துக்கு சேவை செய்யாமல், கட்சியின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று எதிா்பாா்க்கும் காங்கிரஸ் கட்சியிலும் தொடர விருப்பமில்லை. அதனால், அந்தக் கட்சியில் இருந்தும் விலகினேன்.
Advertisement
தற்போது திமுகவில் உள்ள பாதி போ் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவா்கள்தான். அவா்களைப் பாா்த்து ஜிம்னாஸ்ட்டிக் வீரா்கள் என்று பழனிவேல் தியாகராஜன் கூறுவாரா?
நானும், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் எனது கணவா் சுந்தா்.சியும் பட்டதாரிகள் அல்ல. ஆனால், மற்றவா்களை மதிக்கும் அளவுக்கு நாங்கள் இருவரும் படித்தவா்கள்.
அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் பேச்சுகள், தோல்வியின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது. ரூ.30 ஆயிரம் கோடி தொடா்பான விடியோ வெளியான பின்னா், பழனிவேல் தியாகராஜன் ஏன் நிதி அமைச்சா் பொறுப்பிலிருந்து மாற்றம் செய்யப்பட்டாா் என்று மக்களுக்கு விளக்குவாரா என்று குஷ்பு கேள்வி எழுப்பினாா்.