மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்! டி.கே. சிவக்குமார்
திமுக ஆட்சி அமைக்கும் என்று கர்நாடக துணை முதல்வர் பேசியது பற்றி...
தமிழ்நாட்டில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இறுதிகட்டப் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
திமுக தலைமையில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் இன்று டி.கே. சிவக்குமார் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
Advertisement
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் வந்திறங்கிய டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
”திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்கின்றன. அனைவரும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழக அரசு மிகச் சிறந்த முறையில் பணியாற்றியுள்ளது. மக்களின் நலனுக்காக நாங்கள் பல்வேறு சிறந்த வாக்குறுதிகளையும் நலத்திட்டங்களையும் வழங்கியுள்ளோம்.
தற்போது அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. மத்திய அரசின் கொள்கையால் சாமானிய மக்களின் வருமானம் குறைந்து வருகிறது.
இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையின் கீழ், இத் தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் எளிதான ஒன்றாக அமையும் என்றே நான் கருதுகிறேன். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன், திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்த பிறகு, அனைவரையும் அழைத்து விவாதிக்க வேண்டும். இது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பலனளிக்கக் கூடிய மசோதா அல்ல, நாட்டின் பெண்களுக்கு உதவும் மசோதா.” எனத் தெரிவித்தார்.