ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு பற்றி...
சென்னை: தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வில்லிவாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜி. தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சொத்து விவரங்களை வேட்புமனுவில் படிவம் 26-இல் தெரிவிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது மனைவியின் சொத்துக்களை குறிப்பிடாமல் மறைத்துள்ளார்.
Advertisement
ரூ. 117 கோடி சொத்துக்களைக் கொண்ட மார்ட்டின் ப்ராப்பர்ட்டி டெவலப்பர்ஸ், ரூ. 123 கோடி சொத்துக்களைக் கொண்ட டாமினன்ட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இயக்குநராக உள்ள ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்ஸிக்கு சொந்தமான சொத்துக்களின் விவரங்களை வேட்புமனுவில் ஆதவ் அர்ஜுனா குறிப்பிடவில்லை.
இதில் பல்வேறு சொத்துகள், அமலாக்கத்துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு பரிசீலனையின் போது, மனைவியின் சொத்துக்களை ஆதவ் அர்ஜுனா மறைத்துள்ளதாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தேன். ஆனால் அந்த புகாரை முறையாக பரிசீலிக்காமல் நிராகரிக்கப்பட்டது.
எனவே எனது புகாரை நிராகரித்து தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக நான் அளித்த புகார் மீது முறையாக விசாரணை நடத்த தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.